Published : 27 Oct 2022 07:44 PM
Last Updated : 27 Oct 2022 07:44 PM

அழகும் ஆபத்தும்: தலைநகரில் நுரை பொங்கி வழிந்தோடும் யமுனை நதி

வீடியோ ஸ்க்ரீன்ஷாட்

தலைநகர் டெல்லியில் நுரை ததும்ப பாய்ந்தோடும் யமுனை நதியின் வீடியோ காட்சி காண்போரை கவர்கிறது. அதேநேரத்தில் இது பார்க்க அழகாக இருந்தாலும் ஆபத்து அதிகம் என சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் டெல்லி அரசின் மீது அவர்கள் குற்றமும் சுமத்தியுள்ளனர். அடுத்த சில நாட்களில் இந்த நதியில்தான் திரளான மக்கள் கூட மேற்கொள்ளும் வழக்கமான பூஜை ஒன்றும் நடைபெற உள்ளதாம்.

டெல்லியில் உள்ள காளிந்தி குஞ்ச் பகுதியில் யமுனை நதி மாசு காரணமாக இந்த அடரத்தியான வெள்ளை நிற நுரை பாய்ந்தோடும் நீரில் மேற்பரப்பில் காணப்படுகிறது. அதில் சிலர் படகை இயக்கி செல்லும் காட்சியும் பதிவாகி உள்ளது.

சூரிய பகவானை வழிபடும் விதமாக தீபாவளியை அடுத்த ஆறு நாட்களுக்கு பிறகு இந்த பூஜை அங்கு கொண்டாடப்படுவது வழக்கமாம். அந்த நேரத்தில் மக்கள் முட்டி அளவுக்கு யமுனை நதியில் இறங்கி வழிபாடு செய்வார்களாம். வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இந்த பூஜை அங்கு கொண்டாடப்பட உள்ளதாம். இந்தs சூழலில் நஞ்சு நிறைந்த நுரை ததும்பும் யமுனையின் இந்த நிலை, அதில் இறங்கும் மக்களுக்கு தீங்குகளை ஏற்படுத்தும் என தெரிகிறது.

யமுனை நதியின் இந்த மாசுக்கு காரணம் டெல்லி அரசின் மெத்தனப் போக்கு தான் என சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆண்டுதோறும் இந்த நிலை தொடருவதாகவும் அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். மாசு நிறைந்த தொழிற்சாலை கழிவுகள்தான் இதற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் இதேபோல தான் பொங்கும் நுரைக்கு மத்தியில் இந்த பூஜையை நடத்தி வருவதாக தெரிகிறது. இருந்தாலும் இந்த முறை மாசை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x