Published : 23 Sep 2022 02:43 PM
Last Updated : 23 Sep 2022 02:43 PM

மரத்தை மட்டும் கண்டால்... - இணையத்தைக் கலக்கும் ‘அதிசய’ ஆந்தையின் படம்

தான் இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு தன்னை உருமாற்றிக் கொண்டு சூழலுடன் ஒன்றிப்போய்விடுவதில் பச்சோந்திகள் பெயர் போனவை. இங்கு கொஞ்சம் வித்தியாசமாக அமர்ந்திருக்கும் சூழலுடன் ஒன்றிப்போய் இருக்கும் ஆந்தையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வட்ட முகம், அதில் உள்ளடங்கி இருக்கும் பெரிய உருண்டை கண்கள், ஒற்றைக் கோரைப் பல்லாக நீண்டிருக்கும் அலகு என இயற்கையின் அதிசயத்தக்க படைப்புகளில் ஒன்று ஆந்தை. இரவு வேட்டைக்கு பெயர் போன இந்த இரவாடிகள் கொஞ்சம் அதிசயமான பறவையும் கூட. இவற்றில் சில வகை ஆந்தைகள் தாங்கள் இருக்கும் சூழலுடன் கலந்து தன்னை மறைத்துக் கொண்டு எதிரிகளை ஏமாற்றி குழப்பமடையச் செய்யும் திறன் கொண்டவை.

அப்படி மரத்தின் நிறத்துடன் ஒன்றிணைந்து தன்னை மறைத்துக் கொண்டிருக்கும் ஆந்தை ஒன்று இணையத்தில் வெளியாக பார்ப்பவர்களை பரசவமும் ஆச்சரியமும் அடையச் செய்துள்ளது. வைரலாகி வரும் அந்தப் புகைப்படத்தில் ஆந்தையின் சாம்பல் நிற இறகுகளும், உடலும் அது அமர்ந்திருக்கும் மரத்தின் நிறத்துடன் நன்றாக பொருந்திப் போய் இருக்கிறது. இதனால், முதல் பார்வைக்கு மரத்திற்கு கண்களும் மூக்கும், மீசையும் முளைத்திருப்பது போல தெரிகிறது. அந்த அளவிற்கு மரம் அதில் படந்திருக்கும் பாசிப்பச்சைகளுடன் அந்த ஆந்தை கச்சிதமாக பொருந்திப்போய் ‘மரத்தை மட்டும் கண்டால் ஆந்தை தெரியாது...’ என்று பாடவும் தோன்றுகிறது.

புயிடென்கேபிடன் (Buitengebieden) என்ற பயனர், வியாழக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் உருமாற்றம் என்று பொருள்படும்படியாக Camouflage என்று தலைப்பிட்டு ஆந்தையின் படத்தினை பதிவிட்டுள்ளார். பதிவிடப்பட்ட சில மணி நேரங்களுக்குள் வைரலாகிய அந்தப் பதிவினை 1.3 லட்சம் பேர் விரும்பி உள்ளனர். 12 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் அதனை ரீஷேர் செய்துள்ளனர். அதேபோல அந்தப் படம் குறித்து பலர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

பயனர் ஒருவர், "அய்யோ... படத்தினை நன்றாக பார்க்கும் வரை மரத்தில் யாரோ ஆந்தையின் முகத்தை செதுக்கி வைத்திருக்கிறார்கள் என்றே நினைத்தேன்... அற்புதம்" என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயனர், "அடக்கடவுளே... உண்மையில் மரத்தில் யாரோ ஆந்தையின் முகத்தை செதுக்கியிருக்கிறார்கள் என்றே நினைத்தேன். அது நிஜ ஆந்தை என்பதை உணர எனக்கு சிறிது நேரமானது" என்று தெரிவித்துள்ளார்.

மூன்றாவதாக ஒரு பயனர், “அருமையாக மறைந்துள்ளது. உங்களால் ஆந்தையை பார்க்க முடியாது. இயற்கை எப்போதுமே அற்புதமானது” என்று தெரிவித்துள்ளார்.

— Buitengebieden (@buitengebieden) September 21, 2022

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x