Published : 29 Aug 2022 04:25 AM
Last Updated : 29 Aug 2022 04:25 AM

மழைக்காடுகளின் அடையாளமாக விளங்கும் இருவாச்சி பறவைகள்: கீழ்கோத்தகிரியை முற்றுகையிடும் பறவை ஆய்வாளர்கள்

கோத்தகிரி

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரிகிழக்கு சரிவு வனப்பகுகளில் இருவாச்சி பறவைகள் தென்படுகின்றன. கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்தாண்டு அதிகளவில் காணப்படுகின்றன.

சேலமரம் அத்தி எனப்படும் அத்தி மரங்களின் பழங்களை உண்ண, இம்மரங்களில் அதிகளவில் வந்து அமர்கின்றன. உருவத்தில் பெரியதாகவும், கருப்பு, வெள்ளை, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்களின் கலவையாகவும் கண்ணை கவரும் பேரழகு பறவையாக வலம் வருகின்றன. இப்பறவைகள் அதிகளவில் காணப்படுவதால், கீழ் கோத்தகிரியை பறவை ஆய்வாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக இருவாச்சி பறவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் கோத்தகிரியை சேர்ந்த ஆர்.கண்ணன் கூறும்போது, "இருவாச்சி பறவைகள் இனப்பெருக்க காலம் முடிந்து, தன் குஞ்சுகளுக்கு பறப்பதற்கும், இரை தேடவும் கற்றுக்கொடுக்கும் காட்சிகளை காண முடிகிறது.

இது குறித்து, கடந்த ஏழு ஆண்டு கால புகைப்பட தொகுப்புகளை வைத்து பார்க்கும்போது, ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் அதிக அளவு பழ மரங்களில் காணப்படுகின்றன. இவை, ஹெலிகாப்டர் பறப்பது போன்ற ஒலியுடன் பறக்கும். இதனை, தாண்டி பறவை என்று பழங்குடி மக்கள் அழைக்கின்றனர்.

வாழ்நாளில் ஒரே ஓர் இணையோடு மட்டுமே வாழும். தன் இணையை தேர்ந்தெடுக்க அனைத்துபறவைகளைபோல உயரப் பறத்தல், கிளையை உலுக்கி நடனமிடுதல் உள்ளிட்ட செயல்களால் இணையை கவர்கிறது.

இனப்பெருக்க காலம் வந்ததும், ஆள் அரவமற்ற உயரமான மரங்களின் பொந்துகளில் பெண் பறவையை வைத்து வெளிப்புறம் மண், மரப்பிசின், பழக்கூழ் கொண்டு அடைத்துவிடும். மேல் புறம் பெண் பறவைக்கும், குஞ்சுகளுக்கும் ஆண் பறவை உணவூட்டவும், கீழ் புறம் கழிவுகளை வெளியேற்றவும் சிறிய இரண்டு துவாரங்களை மட்டும் விடுகிறது.

பெண் பறவையானது, தன் சிறகுகளை உதிர்த்து மெத்தை போலாக்கி கூட்டுக்குள் குஞ்சுகளுக்கு அளிக்கிறது. குஞ்சுகள் பறக்க தயாராகும் காலத்தில், ஆண் பறவை மரப்பொந்துக்கு வெளியே உள்ளஅடைப்பை உடைத்து குஞ்சுகளைபறக்க பழக்க ஆரம்பிக்கும். பறவையின தோற்றத்தில் பறப்பதில், இணையோடு வாழ்வதில், கூடு கட்டமைப்பதில், உணவூட்டுவதில் என அனைத்திலும் இருவாச்சி பறவை தனித்துவமானது.

இருவாச்சி பறவைகள் உட்கொண்டு வெளியேற்றும் எச்சத்தில் உள்ள தாவர விதைகள் உயிர்ப்புத்தன்மை மிக்கவை. இப்பறவைகளின் எச்சங்களால்தான் காட்டில் மரங்கள்பெருகுகின்றன. இப்பறவைகள் இருக்கிற காடுகளை மழைக்காடுகள் என அழைக்கிறார்கள். மழைக் காடுகள் இல்லையென்றால் இருவாச்சி பறவைகளும் இல்லை." என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x