Published : 16 Jun 2022 04:16 PM
Last Updated : 16 Jun 2022 04:16 PM

ஆர்டிக் ஸ்குவா | தனுஷ்கோடியில் முதன்முறையாக தென்பட்ட அரிய வகை கடற்காகம்

மதுரை: அரிய வகை பறவையினமான 'ஆர்டிக் ஸ்குவா' என்னும் கடற்காக இன பறவை முதல் முறையாக தனுஷ்கோடி பகுதியில் கண்டு அறியப்பட்டுள்ளது. இப்பறவையினங்கள் உலகின் வடதுருவ முனையில் உள்ள ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்பவை என்று பறவையியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தின் மன்னார் வளைகுடா எப்போதும் பல்வேறு ஆச்சரியங்களையும், கடல் சார் உயிரினங்களும், பறவையினங்களும் கொண்ட பல்லுயிர் வளம் மிக்க ஒரு கடல் பகுதியாக திகழ்கிறது. இந்தப் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மதுரையைச் சேர்ந்த பறவையியல் ஆர்வலரான 'இறகுகள்' அம்ரிதா இயற்கை அட்டக்கட்டளையைச் சேர்ந்த ரவீந்திரன், பறவைகள் வாழ்விடம் மற்றும் வலசை வரும் பறவைகள் பற்றிய ஆய்வுகளை தமிழக வனத்துறையின் ஒத்துழைப்புடன் செய்து வருகிறார்.

இவர், ஒவ்வோர் ஆண்டும் மாநிலத்தின் பல கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து இப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்.

வழக்கம்போல், இந்த ஆண்டு தொடர் பறவைகள் கண்காணிப்பில் ஈடுபட்ட ரவீந்திரன் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சேர்ந்த பறவை ஆய்வாளர் பைஜு ஆகியோர் தேடுதலில், அரிய வகை பறவையினமான 'ஆர்டிக் ஸ்குவா' என்னும் கடற்காக இன பறவை முதல் முறையாக தனுஷ்கோடி பகுதியில் கண்டு அறியப்பட்டுள்ளது. இப்பறவையினங்கள் உலகின் வடதுருவ முனையில் உள்ள ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்பவை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரவீந்திரன் கூறியதாவது: ''பெரும்பாலும் ஆழ்கடல் பரப்பில் வாழும் இவை இனப்பெருக்க காலங்களில் மட்டுமே நிலப்பரப்புக்களை நாடி வருகின்றன. இப்பறவையினங்கள் உணவுக்காக பிற கடற்காகங்களிடம் இருந்தும், ஆலா பறவைகளிடம் இருந்தும் அவற்றின் உணவினை வழிமறித்து திருடிக் கொள்கின்றன. எனவே இப்பறவையினை ஐரோப்பியர்கள் கடற்கொள்ளையன் என அழைக்கிறார்கள். ஆனால், இவை இனப்பெருக்க காலத்தில் குஞ்சுகளுக்கு இரையூட்ட சிறிய வகை ஊர்ந்து செல்லும் உயிர்களையும், பாலூட்டிகளையும், பறவைகளின் முட்டை, குஞ்சுகளை வேட்டையாடுகின்றன. உலகில் வட துருவத்திலும், தென் துருவத்திலும் இனப்பெருக்கம் செய்யும் ஒரே பறவையினம் இது என்றும் சொல்லலாம். இந்த ஆண்டு இத்தகைய அரிய பறவையினம் தமிழகத்தில், தூத்துக்குடி, பழவேற்காடு, மற்றும் ராமநாதபுரம் கடற்பகுதிகளில் காணப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

இப்பகுதிகளில் ஏற்பட்டு வரும் மனித தேவைகளுக்கான வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் முறையில்லா நடவடிக்கைகளினால் பவளப்பாறைகள் சூழ்ந்த கடற்பகுதிகள் பெரும் அழிவை எதிர்கொள்கிறது. சாலை மற்றும் ரயில் பாதைகள் அமைக்கும் திட்டங்களினால் கடற்கரையின் மணல் பகுதிகள் அழிந்து கரையின் மேற்பரப்பு இறுகி கல்லும், சரளை மண்ணுமாக மாறிப் போகிறது. எனவே கடலில் வாழும் சிறிய மெல்லுடலிகளும், நண்டுகளும், பூச்சியினைகளும் அழிந்து போகின்றன. இதன் அழிவால் வட துருவங்களில் இருந்து வலசை வரும் பறவைகளின் உணவு ஆதாரம் அழிந்து போகிறது.

சுற்றுலா பயணிகள் இங்கே வீசிச் செல்லும் உணவுக் கழிவுகளும், பிளாஸ்டிக் குப்பைகளும் இப்பகுதியின் அழகையும், சூழலையும் நாசம் செய்கின்றன. மன்னார் வளைகுடா பகுதி காக்கப்படுவதின் மூலம் பல்லுயிர் வளம் பெருகுவதுடன், கடல் மீன்களின் வளம் பெருகி மீனவர்களின் வாழ்க்கை மேம்படும்,'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x