வால்பாறையில் தாக்க முயன்ற கரடியை குடையால் அடித்து விரட்டிய தொழிலாளர்கள்!

வால்பாறையில் தாக்க முயன்ற கரடியை குடையால் அடித்து விரட்டிய தொழிலாளர்கள்!

Published on

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த லோயர் பாரளை எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை முன்பு நேற்று முன்தினம் மாலை தொழிலாளர்கள் 2 பேர் பேசிக் கொண்டிருந்தனர். லேசாக மழை பெய்து கொண்டிருந்த நிலையில், கையில் குடையுடன் நின்றிருந்தனர்.

அப்போது, தேயிலை செடிகளுக்கு பின்னால் மறைந்திருந்த கரடி ஒன்று, திடீரென ஓடி வந்து, தொழிலாளர்களை தாக்க முயன்றது. இதனை சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள், சுதாகரித்துக் கொண்டு கையில் வைத்திருந்த குடையால், கரடியை அடித்தனர். இதையடுத்து, கரடி அங்கிருந்து தப்பி தேயிலை தோட்டத்துக்குள் ஓடி மறைந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில், கரடியின் தாக்குதலில் இருந்து தொழிலாளர்கள் தப்பினர். இந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in