

சென்னை: யானைகள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருக்க உலக யானைகள் தினத்தில் உறுதி ஏற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக யானைகள் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: உலக யானைகள் நாளில், தமிழகத்தின் இயற்கை மரபையும், வரலாற்றையும் செழுமைப்படுத்துவதில் யானைகளின் அளப்பரிய பங்கு குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
கோவையில் மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் யானைகள் நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்று, மதுக்கரையில் நாம் அமைத்துள்ள செயற்கை நுண்ணறிவு எச்சரிக்கை அமைப்பை பார்வையிட உள்ளார். இந்த அமைப்பின் மூலம் 2,800 முறை யானைகள் ரயில் தண்டவாளத்தைப் பாதுகாப்பாகக் கடந்து சென்றுள்ளன. இதனால் 2024 பிப்ரவரியில் இருந்து ஒரு யானைகூட ரயில் மோதி இறக்காமல் காப்பாற்றியுள்ளோம்.
அண்மையில், தெப்பக்காட்டில் யானை பாகன்களுக்கான கிராமத்தையும் அரசு சார்பில் தொடங்கி வைத்தேன். யானை பாகன்களின் நலனிலும் அக்கறை கொண்டுள்ளோம். இனிவரும் காலங்களிலும் யானைகள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருக்க இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.