தமிழக வனப்பகுதிகளில் ஒரே நாளில் 54.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு

தமிழக வனப்பகுதிகளில் ஒரே நாளில் 54.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழக வனத்துறை சார்பில், வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களால் வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக “பிளாஸ்டிக் இல்லாத வனம்” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வனத்துக்குள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தொடக்க நிலையிலேயே தடுக்க வனத்துறையின் 132 சோதனைச் சாவடிகளிலும் சோதனை செய்த பிறகே, பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் உடைமைகள் அனுமதிக்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் தொடர் நிகழ்வாக, கடந்த 19-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 46 வனக் கோட்டங்களில் மாணவர்கள், உள்ளூர் மக்கள், தொண்டு நிறுவனத்தினர், வன அலுவலர்கள் உள்ளிட்ட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வனப் பகுதிகளில் வீசி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் பணி நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் 54.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in