Published : 10 Mar 2025 05:18 PM
Last Updated : 10 Mar 2025 05:18 PM

அரசு, அதிகாரிகள் அலட்சியம்: வனத்துறை ஆராய்ச்சி மையங்களில் ஆய்வுகள் முடக்கம்

தமிழக வன ஆராய்ச்சி மையங்​களில் ஆராய்ச்​சிகள் நடை​பெறாமல் முடங்கி உள்​ளன. வனத்​துறை உயர​தி​காரி​களின் அலட்சியம் மற்​றும் அரசு நிதி ஒதுக்​காத​தால் இந்த பணி​கள் நடை​பெற​வில்​லை. ஊழியர்​களும் சம்​பளமின்றி பணி​யாற்​றும் அவல நிலை​ உள்​ளது.

தமிழகத்​தில் மதுரை, திருச்​சி, சென்​னை, தரு​மபுரி, கோவை ஆகிய 5 இடங்​களில் வன ஆராய்ச்சி மையங்கள் செயல்​பட்டு வரு​கின்​றன. இந்த மை​யங்​கள் அந்​தந்த பகு​தி​களில் உள்ள தட்​பவெப்ப சூழல், நிலத்​தின் தன்​மை, அங்​குள்ள மாற்​றங்​கள் உள்​ளிட்​ட​வற்றை கருத்​தில் கொண்டு புதிய திட்​டங்​களை ஆராய்ச்சி செய்து செயல்​படுத்​து​வார்​கள்.

குறிப்​பாக புதி​தாகமரக்​கன்​றுகளை உற்​பத்தி செய்​தல், மரங்​கள் விரைவாக வளர்​வதற்​கும், நோய், பரு​வநிலை மாற்​றம் உள்​ளிட்ட பல காரணி​களால் பாதிப்​படை​யாமல் இருக்க என்​னென்ன செய்ய வேண்​டும் என்​பவை குறித்து அவ்​வப்​போது ஆராய்ச்சி செய்​வது இந்த​மை​யங்​களின் பணி​யாகும். மேலும் தட்​பவெப்ப மாறு​தலுக்கு ஏற்ற உயர் ரக மரக்​கன்​றுகளை வளர்த்​தல், அவற்றை விவ​சாய நிலங்​களில் நடு​தல், புதிய தொழில்​நுட்​பங்​களை புகுத்​துதல் உள்​ளிட்​ட​வை​யும் இந்த மை​யங்​களின் பணி​யாகும்.

இந்த மையங்​களில் கடந்த, 2023-24, 2024-25 ஆகிய 2 ஆண்​டு​களில் ஆராய்ச்​சிக்​கான நிதியை தமிழக அரசு ஒதுக்​காத​தால் பணி​கள் முடங்​கி​யுள்​ள​தாக புகார் கூறப்​படு​கிறது. இதனால் ஆராய்ச்சி மையங்​கள் தற்​போது பொருட்​காட்​சி​போல காட்சி அளிப்​ப​தாக​வும், இங்​கு, பணிபுரி​யும் 100-க்​கும் மேற்​பட்​டோர் எந்த பணி​யுமின்றி அலு​வல​கத்​துக்கு வரு​வதும், செல்​வது​மாக இருப்​ப​தாக​வும் தெரிவிக்​கப்​படு​கிறது. நவீன கால சூழலுக்கு ஏற்​ற​தாக​வும், நீடித்த வளர்ச்சி என்ற இலக்​கிலும், வனம் தொடர்​பான திட்​டங்​களை வனத்​துறை உரு​வாக்கி வரு​கிறது.

இதற்​கான கட்​டமைப்பு வசதி​களுக்​கான நிதி தேவை குறித்​து, அரசுக்கு வரைவு அறிக்கை அனுப்​புவ​தில் வனத்​துறை உயர் அதி​காரி​கள் காலம் தாழ்த்​து​வ​தால் ஆராய்ச்சி பணி​கள் முடங்கி உள்​ளன. அரசு இதனை சரி செய்து நிதி ஒதுக்​கீடு செய்ய வேண்​டும் என்ற கோரிக்கை எழுந்​துள்​ளது. இதனிடையே, 2023-24-ம் ஆண்டு ரூபாய் 7 கோடி மதிப்​பீட்​டில் திட்​டங்​கள் தயாரிக்​கப்​பட்டு அரசுக்கு உரிய நேரத்​தில் அனுப்​பாமல், கால​தாமத​மாக அனுப்​பப்​பட்​ட​தால் நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட​வில்​லை.

மேலும், 2024-25-ம் ஆண்டு அதே திட்​டத்தை செயல்​படுத்த அரசிடம் கோரிக்கை வைக்​கப்​பட்​டது. அது​வும் கால​தாமத​மாக முன் வைக்​கப்​பட்​ட​தால், ரூ.7 கோடி வழங்​கு​வது சாத்​தி​யம் இல்லை என்​றும் ரூ.3 கோடி மட்​டுமே வழங்​கு​வ​தாக அரசு தரப்​பில் தெரிவிக்கப்​பட்​டுள்​ளது. ஆனால் அதற்​கும் அறிக்கை அனுப்​புவ​தில் வனத்​துறை உயர் அதி​காரி​கள் கால​தாமதம் செய்​தனர். இதனால் நிதி கிடைக்​க​வில்​லை. இந்த ஆண்​டாவது அரசு தலை​யிட்டு நிதி ஒதுக்​கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என கோரிக்கை எழுந்​துள்​ளது.

3 மாத சம்​பளம் இல்லை: தமிழகத்​தில் உள்ள ஆராய்ச்சி மையங்​களில் இளம் ஆராய்ச்​சி​யாளர்​கள், இளநிலை உதவி​யாளர்​கள், அலு​வலக உதவி​யாளர்​கள், தோட்ட பராமரிப்​பாளர்​கள், கணினி ஆபரேட்டர்கள், ஓட்​டுநர்​கள் என சுமார் 140-க்​கும் மேற்​பட்​டோர் பணிபுரி​கின்​றனர். இவர்​களுக்கு கடந்த 3 மாதங்​களாக சம்​பளம் வழங்​கப்​பட​வில்​லை. வனத்​துறை​யின் நிர்​வாக சீர்​கேடால் ஊழியர்​கள் சம்​பளம் இன்றி தவித்து வரு​கின்​றனர்.

இதுகுறித்து இயற்கை நல ஆர்​வலர் குமரன் கூறிய​தாவது: தமிழகத்​தில் பசுமை பரப்​பளவை அதி​கரிக்க அரசு சார்​பில் திட்​டங்​கள் தீட்​டி​னாலும், அதை செயல்​படுத்​து​வ​தில் பல்​வேறு சிக்​கல்​கள் இருப்​ப​தால் பெரும்​பாலான திட்​டங்​கள் தொடங்​கிய நிலை​யிலேயே முடங்கி விடு​கின்​றன. தற்​போது வனப்​பகு​தி​கள் குறைந்து வரு​வ​தால் வெப்​பமய​மாதல் நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. இவற்றை குறைக்க வேண்​டும் என்​றால் இயற்கை சூழ்ந்த வனப்​பகு​தியை அதி​கரிக்க வேண்​டும்.

அதற்​காக, புதிய ஆராய்ச்​சிகள் செய்​யப்பட வேண்​டும். ஆனால் 2 ஆண்​டு​களாக நிதி ஒதுக்​காமல் ஆராய்ச்சி மையங்​கள் முடங்கி இருப்​பது வேதனை அளிக்​கிறது. அரசு சார்​பில் இந்த ஆண்​டாவது கூடு​தல் நிதி ஒதுக்கி அதி​கள​வில் ஆராய்ச்​சிகளை மேற்​கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்​டும். ஊழியர்​களுக்கு சம்​பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து வனத்​துறை அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: வனத்தை பாது​காக்​க​வும், விரி​வாக்​கம் செய்​ய​வும் ஆராய்ச்​சிகள் மேற்​கொள்ள அரசு பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. ஆனால், சில வனத்​துறை உயர் அதி​காரி​கள் சரிவர பணி செய்​யாத​தால் இது​போன்ற சூழல் ஏற்​படு​கிறது. தமிழகத்​தில் உள்ள வன ஆராய்ச்சி மையங்​களுக்கு ஒவ்​வொரு ஆண்​டும் புதிய திட்​டங்​கள் செயல்​படுத்த அரசு நிதி ஒதுக்​கீடு செய்​யும். என்ன ஆராய்ச்சி மேற்​கொள்​ளப்பட உள்​ளது என்​பது குறித்து விரி​வான அறிக்கை தாக்​கல் செய்​யப்பட வேண்​டும்.

குறிப்​பாக நிதியாண்டு தொடக்​கத்​தில் ஆராய்ச்சி பகுப்​பாய்வு குழு​வினர் கூட்​டங்​களை நடத்தி என்ன மாதிரி ஆய்​வு​கள் மேற்​கொள்ள வேண்​டும் என்று வனத்​துறைக்கு அறிக்கை தாக்​கல் செய்​வார்​கள். அந்த குழு​வில் அனைத்து துறை அலு​வலர்​களும் இடம்​பெற்​றிருப்​பார்​கள். இவர்​கள் தரும் அறிக்​கையை கொண்டு என்​னென்ன மாதிரி ஆராய்ச்​சிகள் செய்​யப்பட வேண்​டும், அதற்​குண்​டான செல​வினங்​கள் உள்​ளிட்​டவை குறித்து வனத்​துறை சார்​பில் அரசுக்கு அறிக்​கை​ தாக்​கல் செய்ய வேண்​டும்.

ஆனால், அறிக்கை கால தாமத​மாக அனுப்​பப்​படு​வ​தால் நிதி ஒதுக்​கு​வ​தில் கால​தாமதம் ஏற்​படு​கிறது. அரசு நிதி ஒதுக்க தயா​ராக இருந்​தும், திட்​டத்தை அரசின் கவனத்​துக்கு முறை​யாக கொண்டு செல்​வ​தில் வனத்​துறை உயர​தி​காரி​கள் அலட்​சி​யம் காட்​டு​வ​தால், கடந்த 2 ஆண்​டு​களாக அரசு சார்​பில் நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட​வில்​லை. பல்​வேறு நிலைகளில் பணிபுரி​யும்​ தற்​காலிக ஊழியர்​களுக்​கு கடந்​த சில மாதங்​களாக சம்​பளம்​ வழங்​கப்​பட​வில்​லை. எனவே அரசு இதில்​ தலை​யிட வேண்​டும்​ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x