‘பர்னஸ் ஆயில்' நீராவி இன்ஜின்களை டீசலுக்கு மாற்றப்பட்டு நடத்தப்பட்ட மலை ரயில் சோதனை ஓட்டம்.
‘பர்னஸ் ஆயில்' நீராவி இன்ஜின்களை டீசலுக்கு மாற்றப்பட்டு நடத்தப்பட்ட மலை ரயில் சோதனை ஓட்டம்.

டீசல் இன்ஜினுக்கு மாறும் உதகை மலை ரயில்!

Published on

உதகை: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போது மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. அடர்ந்த வனத்துக்கு ஊடாகவும், ஆறுகளுக்கு குறுக்கேயும் ரயில் பாதை அமைக்கப்பட்டது. செங்குத்து மலைச்சரிவில் சுவிட்சர்லாந்து தொழில்நுட்பமான பல் சக்கர தண்டவாள அமைப்பில், நீலகிரி மலை ரயில் பாதை நிறுவப்பட்டுள்ளது.

‘யுனெஸ்கோ' பாரம்பரிய அந்தஸ்து பெற்ற மலை ரயிலில் பயணம் செய்ய, சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நூற்றாண்டுகளை கடந்து நீராவி மூலமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த மலை ரயில், ஆரம்பத்தில் நிலக்கரி மூலமாகவே இயக்கப்பட்டது. தொடக்க காலத்தில், ‘எக்ஸ் கிளாஸ்' நிலக்கரி நீராவி இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன.

நிலக்கரி தட்டுப்பாடு, மாசுபாடு குறைப்பு, தொழில்நுட்ப மாற்றம் காரணமாக ஃபர்னஸ் ஆயில் எனப்படும் தாவர எண்ணெய் மூலமாக இயக்கப்பட்டது. அதிலும், காற்று மாசு என்பதால், டீசல் மூலமாக இயங்கும் வகையில் அனைத்து ரயில் இன்ஜின்களும் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2002-ல் இருந்து ‘பர்னஸ் ஆயில்' மூலமாக இயங்கும் வகையில் ரயில் இன்ஜின் மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், மலை பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க, பர்னஸ் ஆயில் பயன்படுத்த மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. இதனால், பர்னஸ் ஆயில் இன்ஜின்களை டீசல் பயன்படுத்தும் வகையில் மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து, குன்னூர் பணிமனையில் சீனியர் டெக்னீசியன் மாணிக்கம் தலைமையில், மூன்று ‘பர்னஸ் ஆயில்' நீராவி இன்ஜின்கள், டீசலுக்கு மாற்றப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றன.

திருச்சி பொன்மலை பணிமனையில் ‘37397' எண் கொண்ட ‘பெட்டா குயின்' என அழைக்கப்படும் பர்னஸ் ஆயிலில் இயங்கும் கடைசி இன்ஜின் தற்போது டீசலுக்கு மாற்றப்பட்டுவிட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை 4 பெட்டிகளுடன், டீசலில் இயங்கும் இன்ஜினில் மலை ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை, மலை ரயில் சேவை பயன்பாட்டுக்கு இந்த டீசல் இன்ஜின் விரைவில் கொண்டுவரப்படும். இதன்மூலமாக, சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படும்” என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in