

கோவை: கோவையில் பெண் யானை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட குட்டியை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தொண்டாமுத்தூர், தடாகம் மற்றும் மருதமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. உணவு, தண்ணீர் தேடி இரவு நேரங்களில் விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த டிச.24-ம் தேதி பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பகுதியில் 30 வயது மிக்க பெண் யானை உயிரிழந்தது.
கோவை மண்டல வனப் பாதுகாவலர் வெங்கடேஷ் மேற்பார்வையில், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில் உதவி வன பாதுகாவலர் விஜயகுமார் மற்றும் வனக் கால்நடை மருத்துவர் சுகுமார், கோவை வனச்சரகர் திருமுருகன் ஆகியோர் கொண்ட வனப்பணியாளர்கள் குழுவினர் கடந்த 7 நாட்களாக யானை கூட்டத்துடன் சேர்க்க முயற்சி செய்து வந்தனர்.
இந்நிலையில், குட்டியை யானை கூட்டம் சேர்த்து கொள்ளாத நிலையில் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு முகாமுக்கு இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டது.