உதகையில் உறைபனிப் பொழிவு தொடக்கம்: கடும் குளிரால் மக்கள் அவதி

உதகையில் உறைபனிப் பொழிவு தொடக்கம்: கடும் குளிரால் மக்கள் அவதி
Updated on
2 min read

உதகை: உதகையில் இந்தாண்டின் முதல் உறைபனிப் பொழிவு தொடங்கியது. கடும் குளிரால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை பனிக்காலம் நிலவுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காலநிலை மாறுபாடு காரணமாக இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. அந்த வரிசையைத் தொடர்ந்து தற்போது பனிக்காலமும் இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது.

இந்நிலையில், நவம்பர் மாதம் உறைபனி தொடங்கிய ஒரு வாரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. அதன் பின்னர் ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக உறைபனி முற்றிலும் நின்று விட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் பல இடங்களிலும் கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில், ஒரு மாதம் கழித்து இன்று முதல் மீண்டும் உறைபனி தாக்கம் தொடங்கியுள்ளது.

இதன்படி உதகை தாவரவியல் பூங்கா தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தயம் மைதானம் ஆகிய பகுதிகளில் அதிகாலை முதலே அதிக அளவில் பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது பனி கொட்டி கிடக்கிறது. இதனால் வனப்பகுதிகள் அதிகம் கொண்ட நீலகிரி காலையில் பசுமையாக தெரியும் நிலையில் தற்போது வெண்மையாக காட்சியளிக்கிறது.

உதகையில் காலை முதல் மாலை வரை வெயிலான காலநிலை நிலவுகிறது. இரவு முதல் அதிகாலை வரை பணி அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதற்கு இடையே உதகையில் நிலவும் கடும் குளிரிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிகளவில் கம்பளி ஆடைகளை அணிகின்றனர். மேலும் ஒரு சிலர் ஆங்காங்கே தீமூட்டி குளிர் காய்கின்றனர்.

இது குறித்து தோட்டக்கலைத்துறை துணை அதிகாரிகள் கூறும் போது, ''உதகையில் நேற்று குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்சியஸ் அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அடுத்த ஒரு சில வாரங்களில் மைனஸ் டிகிரியை வெப்பநிலை எட்டலாம். அதே சமயத்தில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 55 சதவீதமாக இருந்தது'' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in