

சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள புழல் ஏரி, 18 சதுர கி.மீ. பரப்பளவில், செங்குன்றம், புழல், பம்மதுகுளம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரந்து விரிந்துள்ளது. தற்போது 21.20 அடி உயரமும், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டதாக உள்ளது.
புழல் ஏரியில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீரும், பூண்டி ஏரியிலிருந்து வரும் கிருஷ்ணா நீரும், சோழவரம் ஏரி நீரும் சேமிக்கப்பட்டு, சென்னையின் குடிநீர் தேவைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், திருமுல்லைவாயில் மற்றும் அம்பத்தூரில் குடியிருப்பு பகுதிகள், சிறு தொழில்நிறுவனங்கள் உள்ளிட்டவை வெளியேற்றும் கழிவுநீரால் புழல் ஏரி மாசடைந்து வருகிறதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, புழல் ஏரி, அராபத் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்க தலைவர் செள.சுந்தரமூர்த்தி தெரிவித்ததாவது: ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் பகுதியில் பச்சையம்மன்கோயில் அருகே உள்ள குளக்கரை சாலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக வெங்கடாசலம் நகர் பகுதியில் புழல் ஏரியில் சேரும் வகையில் சுமார் 3 கி.மீ. தூர பிரதான மழைநீர் வடிகால்வாய் உள்ளது. அதேபோல், சிடிஎச் சாலை அருகே சரஸ்வதி நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக தென்றல் நகர் பகுதியில் புழல் ஏரியில் சேரும் வகையில் சுமார் இரண்டரை கி.மீ. தூர மற்றொரு பிரதான மழைநீர் வடிகால்வாய் உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இவ்விரு பிரதான மழைநீர் வடிகால்வாய்களில், மாசிலாமணீஸ்வரர் நகர், கமலம் நகர், வெங்கடாசலம் நகர் மற்றும் சரஸ்வதி நகர், தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் விடப்படுகிறது. அந்த கழிவுநீர் புழல் ஏரியில் கலப்பதால், ஏரி மாசடைந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புழல் ஏரி, அராபத் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தின் பொருளாளரான க.மனோகரன் தெரிவித்ததாவது: திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள இரு பிரதான மழைநீர் வடிகால்வாய்கள் மூலம் மட்டுமல்லாமல், திருமுல்லைவாயில் வெங்கடாசலம் நகர் அருகே உள்ள அனுகிரகம் நகர், கற்பகம்பாள்நகர், சிவா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மழைநீரோடு கழிவுநீர், புழல் ஏரியில் கலக்கிறது. மேலும், அம்பத்தூர், திருமுல்லைவாயில் தென்றல் நகர், ஒரகடம் வெங்கடேஸ்வரா நகர் மற்றும் பம்மதுகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் கழிவுநீரும் புழல் ஏரியில் கலக்கிறது.
எங்கள் இயக்கத்தின் தொடர் அழுத்தம் காரணமாக திருமுல்லைவாயில் வெங்கடாசலம் நகர் பகுதியில், புழல் ஏரிக்கரையில் ஆவடி மாநகராட்சி நிர்வாகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையத்தை அமைத்துள்ளது. அந்த நிலையத்தின் சுத்திகரிப்பு திறன் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் லிட்டர். ஆனால், வெங்கடாசலம் நகர் பகுதியில் புழல் ஏரியில், மழைநீர் வடிகால்வாய் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 4 லட்சம் லிட்டர் கழிவுநீர் சேருகிறது. இப்படி கழிவுநீர் கலந்துள்ளதால், புழல ஏரி பகுதியில் ஆகாயத் தாமரைகள் படர்ந்துள்ளன.
தொடர்ந்து கழிவுநீர் கலப்பதால், இதை குடிநீராக பயன்படுத்தும்போது பல்வேறு உபாதைகள் ஏற்படும். ஆகவே, பொதுமக்கள், மழைநீர் வடிகால்வாய்கள் மூலம் கழிவுநீரை புழல் ஏரியில் விடுவதை தவிர்க்கவேண்டும். ஏரி மாசடைவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து, நீர் வள ஆதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “புழல் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக, ஆவடி மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, கழிவுநீரை சுத்திகரித்து ஏரியில்விட நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.