

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு 10 ஊராட்சி ஒன்றியங்களில் 197 ஏரிகள் நிரம்பின. நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் 977 ஏரிகள் நிரம்பவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, கடந்த 1 மற்றும் 2-ம் தேதியில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளியில் அதிகனமழையும், கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழையும் பெய்தது. இந்த மழையால், மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கிருஷ்ணகிரியில் 76, காவேரிப்பட்டணத்தில் 72, மத்தூரில் 65, பர்கூரில் 165, ஊத்தங்கரையில் 101, வேப்பனப்பள்ளியில் 81, சூளகிரியில் 124, கெலமங்கலத்தில் 110, ஓசூரில் 132, தளியில் 248 என மொத்தம் 10 ஊராட்சி ஒன்றியங்களில் 1,174 ஏரிகள் உள்ளன.
இந்நிலையில், மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு 1,174 ஏரிகளில் 197 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதில், 143 ஏரிகளில் உபரிநீர் வெளியேறி வருகிறது. அதிகபட்சமாக ஊத்தங்கரையில் உள்ள 101 ஏரிகளில் 89 ஏரிகளும், பர்கூரில் 165 ஏரிகளில் 51 ஏரிகளும் நிரம்பியுள்ளன. மாவட்டத்தில் 977 ஏரிகள் நிரம்பவில்லை.
குளம், குட்டைகள் நிலவரம்: இதேபோல, மாவட்டத்தில் 1,404 குளம், குட்டைகள் உள்ளன. இதில், 173 குளம், குட்டைகள் தற்போது பெய்த மழைக்கு முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 167 குளம், குட்டைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. 4 குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இவை தவிர பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 87 ஏரிகளில் 50 ஏரிகள் நிரம்பி உள்ளன. அதேநேரம் வேப்பனப்பள்ளி, கெலமங்கலம், ஓசூர், தளி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் பெரும்பாலும் நிரம்பவில்லை.
நீர் வழித்தட ஆக்கிரமிப்பு: இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது பெய்த மழைக்கு 977 ஏரிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் நிரம்பவில்லை. இதற்கு நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, நீர்ப் பாசன மேலாண்மை திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தாமல் உள்ளதே முக்கிய காரணமாகும்.
குறிப்பாக, எண்ணேக்கோல், அலியாளம் கால்வாய் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி இருந்தால், தென்பெண்ணை ஆற்றில் உபரியாக செல்லும் தண்ணீரை ஏரிகள், குளம், குட்டைகளில் கொண்டு சேர்த்திருக்கலாம்.
எனவே, கால்வாய் திட்டப் பணிகளை தாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும். இதேபோல, ஒவ்வொரு ஒன்றியத்திலும், ஏரி, குளம், குட்டைகளுக்கு நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.