பாசனக் கால்வாய்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க பொள்ளாச்சி விவசாயிகள் கோரிக்கை

ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்
Updated on
1 min read

பொள்ளாச்சி: பாசனக் கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய ஆயக்கட்டு பாசன சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையத்தில் புதிய ஆயக்கட்டு பாசன சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன்17) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு புதிய ஆயக்கட்டு பாசன சங்கத் தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் பிரபாகரன், பொருளாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் மழை வளம் பெருகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் புதிய ஆயக்கட்டு பாசனச் சபை பகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு பாசனப் பகுதிகளிலும் குறைந்தபட்சம் 100 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும், பிஏபி பாசன திட்டத்தில் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள ஆனைமலை நல்லாறு திட்டம் குறித்து அனைத்து விவசாயிகள், விவசாய சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்துவது,

பாசன கால்வாய்களில் ஊராட்சி பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் மற்றும் கால்வாய்களில் கழிவுகள் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க வலியுத்துவது, கடந்தாண்டு பாசன நீர் பகிர்மானத்தின் போது நீர்வளத் துறை மூலம் கொடுக்கப் பட்ட நீர் அளவுக்கு மாறாக கூடுதலாக பாலாற்று பகுதிக்கு நீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் ஆழியாறு திட்ட குழு தலைவர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in