

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள சின்னமனை மீனவர் கிராமத்தில் இருந்து மகாலிங்கம் மகன்கள் சிவபாலன், ஷியாம் குமார் ஆகியோர் தங்களது படகில் கடலுக்கு நேற்று முன்தினம் மீன் பிடிக்கச் சென்றனர்.
பின்னர், மீன் பிடித்துவிட்டு கரை திரும்பிய அவர்களின் வலையில் 50 கிலோ எடை கொண்ட கடல் ஆமை சிக்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வலையில் சிக்கிய ஆமையை மீட்ட மீனவர்கள், உயிருடன் மீண்டும் கடலில் விட்டனர். இது குறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன், மீனவர்கள் இருவரையும் பாராட்டினார்.
மேலும், மீனவர்கள் இருவருக்கும் விரைவில் நடைபெற உள்ள பாராட்டு விழாவில் சான்றிதழ், ரொக்கப் பரிசு வழங்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.