

புதுடெல்லி: உலகில் மிக மோசமான அளவில் காற்று மாசுபாடு நிலவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
காற்றின் தர அளவுகளை மதிப்பீடு செய்யும் சுவிட்சர்லாந்தின் ’ஐக்யூஏர்’ அமைப்பு 2023-ம் ஆண்டுக்கான உலக காற்று தர அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, காற்று மாசு அளவீடான ‘பிஎம் 2.5 செறிவு’ என்பது கன மீட்டருக்கு 5 மைக்ரோகிராமை விட அதிகமாக இருக்கக்கூடாது. ஆனால் இந்தியாவின் வருடாந்திர ‘பிஎம் 2.5 செறிவு’ கனமீட்டருக்கு 54.4 மைக்ரோகிராமாக (54.4 g/m3) உள்ளது.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் வங்கதேசமும் இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன. 2022-ம் ஆண்டில் இந்தியா 8-வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது 3-வது இடம் பிடித்துள்ளது.
134 நாடுகளில் 7,812 இடங்களில் பெறப்பட்ட காற்றுத் தரம்தொடர்பான தரவுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
மிக மோசமான அளவில் காற்றுமாசு நிலவும் முதல் 50 நகரங்களில் இந்தியாவைச் சேர்ந்த 42 நகரங் கள் இடம்பிடித்துள்ளன.
இதில் பிஹாரில் உள்ள பெகுசராய் முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து குவாஹாட்டி, பஞ்சாபில் உள்ள முல்லன்பூர், பாகிஸ்தானின் லாகூர் உள்ளன. உலக அளவில் மிகவும் மாசுபட்ட தலைநகரமாக டெல்லி உள்ளது.