

வேலூர்: வேலூரில் இந்தாண்டில் முதல் சதமாக வெயில் அளவு நேற்று 101.5 டிகிரி பதிவாகி இருந்தது.
வேலூர் மாவட்டத்தி்ல் கடந்த சில நாட்களாக குளிரின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து வந்தது. ஒரு சில நாட்களில் காலை நேரத்தில் குளிரின் தாக்கமும் வெயிலின் தாக்கமும் மாறி, மாறி அதிகரித்து காணப்பட்டன. நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடங்கி மார்ச் மாதம் வரையும் குளிரின் தாக்கம் இருந்ததால் இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டது.
மேலும், இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகபட்சமாக சுமார் 10 டிகிரி அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த வாய்ப்பை நிரூபிக்கும் வகையில் வேலூரில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதாவது, அதிகபட்ச வெயில் அளவாக கடந்த இரண்டு நாட்களும் 99.7 டிகிரி என்ற அளவாக இருந்தது.
மூன்றாவது நாளாக நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக தெரிய ஆரம்பித்தது. காலையில் இருந்தே வறண்ட வானிலை காரணமாக புழுக்கமும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி அதிகபட்ச வெயில் அளவாக 101.5 டிகிரியாக பதிவாகியிருந்தது. இது இந்த ஆண்டின் முதல் சதமாக இந்த வெயில் அளவு பதிவாகிஉள்ளது குறிப்பிடத்தக்கது.