Published : 04 Mar 2024 09:00 AM
Last Updated : 04 Mar 2024 09:00 AM

நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நீடித்து வருவதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் வட்டத்தின் கீழ் குந்தா, கெத்தை, பில்லூர், அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, மாயாறு உட்பட 13 அணைகள் மற்றும் 30 தடுப்பணைகள் உள்ளன. இங்கு தேக்கிவைக்கப்படும் தண்ணீர் மூலமாக மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. கோடை, தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழையின் போது, அணைகளில் நிரம்பி வெளியேறும் உபரி நீர், கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரக் கணக்கான பாசன வசதி மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 130 செ.மீ. கடந்தாண்டில் மூன்று கால பருவ மழை சராசரியாக 55 செ.மீ. பதிவாகியுள்ளது. குடிநீர் தேவை ஓரளவுக்கு பூர்த்தியானாலும், மின் உற்பத்தி, சமவெளி பகுதிகளுக்கான பாசனம் மற்றும் குடிநீர் தேவையில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தாண்டு நீலகிரி மாவட்டத்தில் பனிப் பொழிவு ஏற்பட்டு கடும் வறட்சி நிலவுகிறது. மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழை பெய்யாததால் நீர்த் தேக்கங்களில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

மாவட்டத்தில் பெரிய அணையாக கருதப்படும் அப்பர்பவானி அணை 210 அடி கொண்டது. தற்போது 80 அடி வரை மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாத நிலையில், கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட அணைகளில் 30 சதவீத அளவுக்குதான் தண்ணீர் இருப்பு உள்ளது. மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் மின்வாரியம் திணறி வரும் நிலையில், குடிநீர் ஆதாரத்துக்கான தண்ணீரின் நிலை அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணாவிடம் கேட்டபோது, ‘‘ஆலோசனை நடத்தி வருகிறோம். குடிநீர் தேவைக்காக தண்ணீர் தேவை என்பதால், மின் உற்பத்தியை நிறுத்த மின் வாரியத் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம். கோடை மழை பெய்தால், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x