Published : 24 Feb 2024 05:35 PM
Last Updated : 24 Feb 2024 05:35 PM

‘தாமிரபரணியில் பெருகிவரும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களால் பல்லுயிர் பெருக்கத்துக்கு ஆபத்து’

திருநெல்வேலி: தாமிரபரணியில் பெருகிவரும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களால் பல்லுயிர் பெருக்கத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் வல்லுநர்கள் கவலை தெரிவித்தனர்.

மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி விலங்கியல் துறையுடன் இணைந்து தாமிரபரணி ஆற்றில் காணப்படும் மீன்கள் மற்றும் அவைகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த கருத்தரங்கை நடத்தியது.

திருநெல்வேலி மாவட்ட பேரிடர் மேலாண்மைப் பிரிவு வட்டாட்சியர் க.செல்வன், கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ஷாகுல் ஹமீது, துணை முதல்வர் சையத் முகமது காஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருநெல்வேலி மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை ஆய்வாளர் ஆரோக்கியசாமி, கல்லூரி விலங்கியல்துறை பேராசிரியர் எம். சித்தி ஜமீலா, அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மு. மதிவாணன், ரீ பரமகல்யாணி சுற்றுச் சூழல் மையத்தின் இணைப் பேராசிரியர் எம். முரளிதரன்.

ஏட்ரிஇ பெங்களுரிலிருந்து வருகை தந்த ஆராய்ச்சியாளர்கள் நிலன்ஜன் முகர்ஜி, சூரிய நாரயணன் மற்றும் உள்ளூர் மீனவர் முருகன் ஆகியோர் தாமிரபரணி மற்றும் அதன் நீர்வாழ் பல்லுயிர் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் அமர்வுகளை நடத்தி, மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினர். கருத்தரங்கில் அவர்கள் பேசியதாவது:

தாமிரபரணியில் மொத்தம் 125 சிற்றினங்களை சார்ந்த மீன்கள் இருப்பதாகவும் அதில் 6 இனங்கள் அருகிவரும் பட்டியலிலும் 4 இனங்கள் அச்சுறுத்தப்பட்ட நிலையிலும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் மொத்த மீன் இனங்களில் தாமிரபரணியின் பங்களிப்பு 86 சதவீதம். எண்ணற்ற உள்நாட்டு மீன் இனங்களின் வாழ்விடமாக தாமிரபரணி திகழ்கிறது. இதில் பல ஓரிட வாழ்வி மீன் இனங்களும் அடங்கும். தாமிரபரணியில் திலாப்பியா, கொசு மீன் போன்ற மீன்கள் 1970-ம் ஆண்டுகளில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

தற்போது அதிகமான ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆப்பிரிக்கன் கெளுத்தி, டேன்ங் கிளீனர் போன்ற மீன்கள் ஆற்றில் முழுவதுமாக பரவி, பல்லுயிர் இழப்பு, சுகாதார ஆபத்து மற்றும் பொருளாதார சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

1990-ம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பின்னாட்களில் வேகமாக இனப்பெருக்கம் செய்து இந்திய நதிகளில் முழுவதுமாக ஆக்கிரமித்தது. இதன் இறக்குமதியும், வளர்ப்பும் இந்தியாவில் இப்போது தடை செய்யப்பட்டுள்ளது.

ப்ளெகோ டேங்க் க்ளீனர் மீன்களுக்கு வணிக மதிப்பு இல்லை. மீன்பிடிக்கும்போது இவை மீன்பிடி வலைகளை அழிப்பதால் மீனவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு தெரிவித்தனர். ஏற்பாடுகளை விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே வல்லுநர்கள், மீனவர்கள் மற்றும் உள்ளுர் சமூகத்தினரை கொண்டு ஆற்றில் உள்ள மீன்களின் நிலையை மதிப்பிடவும், கண்காணிக்கவும் பெரிய அளவிலான மீன்கள் கணக்கெடுப்பை நடத்தவும் கருத்தரங்கின் நிறைவில் முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x