

உதகை: உதகை நகரை சுற்றி தொட்டபெட்டா, கேர்ன்ஹில் உள்ளிட்ட வனப் பகுதிகளில் காட்டெருமை, கடமான், சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது வறட்சி காலம் தொடங்கியுள்ளது. வனப் பகுதிகளில் விலங்குகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கிராமப் பகுதிக்குள் அவை நுழைவது தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில், உதகையை அடுத்த காந்திபேட்டை குடியிருப்பு பகுதிக்குள் கரடி சுற்றி திரிந்து வருகிறது. மேலும், இரவு நேரங்களில் ஊரின் அருகே சாலையோரத்தில் சுற்றி திரிகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
இரு சக்கர வாகன ஓட்டிகள் கூடுதல் கவனமாக செல்லுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சாலையோரம் வாகனங்களை நிறுத்தி இயற்கை காட்சிகளை ரசிக்கும் சுற்றுலா பயணிகளும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு வனப் பகுதியில் இருந்து வெளியேறிய கரடி, உதகை நகரின் மையப் பகுதிக்குள் புகுந்தது குறிப்பிடத்தக்கது.