

ஈரோடு: ஆசனூர் அருகே அரசு ப்பேருந்தை யானைக் கூட்டம் வழி மறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி, கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வனச்சாலையில் உலா வருகின்றன. இந்நிலையில், ஆசனூரை அடுத்த மாவள்ளம் பிரிவு அருகே, நேற்று காலை அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது.
அப்போது வனப் பகுதியில் இருந்து வெளியேறிய யானைக் கூட்டம், திடீரென பேருந்தை வழிமறித்து சாலையின் நடுவில் நின்றது. இதனால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். 15 நிமிடம் வரை சாலையில் நின்ற யானைகள், பின்னர் வனப் பகுதிக்குள் சென்றன. அதன் பின்னர் பேருந்து புறப்பட்டுச் சென்றது. பேருந்தை யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.