கிராமத்துக்குள் நுழைந்த 2 யானைகளை வனப்பகுதிக்கு இடம்பெயரச் செய்த வனத்துறை @ தருமபுரி

கிராமத்துக்குள் நுழைந்த 2 யானைகளை வனப்பகுதிக்கு இடம்பெயரச் செய்த வனத்துறை @ தருமபுரி

Published on

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கிராமத்துக்குள் நுழைந்த 2 யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்கு இடம்பெயரச் செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரக பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் நிரந்தரமாக வசித்து வருகின்றன. இவற்றில் ஓரிரு யானைகளோ அல்லது சில யானைகள் அடங்கிய குழுவோ அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள்ளும், விளைநிலங்களுக்கும், நுழைவது உண்டு. இவ்வாறு நுழையும் யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்கு மீண்டும் இடம்பெயரச் செய்வது வழக்கம்.

இந்நிலையில், பாப்பாரப்பட்டி அருகே பழையூர் பகுதியில் உள்ள வெள்ளமண் காடு கிராமத்தில் இன்று (டிச.2) அதிகாலை 2 யானைகள் நுழைந்தன. பின்னர் அப்பகுதியில் உள்ள விளை நிலங்களில் நுழைந்த யானைகள் பயிர்களையும் சேதப்படுத்தின. இதுபற்றி தகவல் அறிந்த வனத் துறையினர் அப்பகுதிக்கு சென்று யானைகளை வனப்பகுதிக்கு இடம்பெயரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இவ்விரு யானைகளும் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளன. இருப்பினும் யானைகளை அடர்வனப் பகுதிக்கு இடம்பெயரச் செய்யும் முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், பழையூர் கிராம பகுதிக்கு திடீரென காட்டு யானைகள் வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in