

ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் சரக்கு வாகனத்தை நிறுத்தி உருளைக் கிழங்கு மூட்டையை எடுத்துச் சென்ற யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப் பாதை உள்ளது. இங்குள்ள சாம் ராஜ் நகர், தாளவாடி, ஆசனூர் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் உருளைக் கிழங்கு மற்றும் காய் கறிகள் ஈரோடு மற்றும் மேட்டுப் பாளையத்துக்கு சரக்கு வாகனங்களில் தினமும் கொண்டு செல்லப்படுகின்றன.
தாளவாடியில் அறுவடை செய்யப்பட்ட உருளைக் கிழங்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் திம்பம் மலைப் பாதையில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது, வனப் பகுதியை விட்டு வெளியே வந்த யானை, அந்த சரக்கு வாகனத்தை வழி மறித்தது. வாகனத்தை ஓட்டுநர் மெதுவாக இயக்கிய போதும்,
யானை அந்த சரக்கு வாகனத்தை தனது தும்பிக்கையால் பிடித்து நிறுத்தியது. அதன் பிறகு உருளைக் கிழங்கு மூட்டையை இழுத்து கீழே தள்ளி எடுத்துச் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.