பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானை: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையை வனத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஏரிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரு வாரத்துக்கு மேலாக நீடித்து வருகிறது. கொடைக்கானலில் வனத் துறை பராமரிப்பில் உள்ள சுற்றுலாத் தலம் பேரிஜம் ஏரி. சுற்றுலாப் பயணிகள் கட்டணம் செலுத்திதான் இங்கு செல்ல முடியும். கடந்த 10-ம் தேதி பேரிஜம் ஏரியில் 3-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டன.
இதனால் சுற்றுலாப் பயணிகள் பேரிஜம் ஏரிக்குச் செல்ல வனத் துறையினர் தடை விதித்தனர். தற்போது 2 யானைகள் ஏரிப் பகுதியை விட்டு வேறு இடத்துக்குச் சென்று விட்டன. ஒரு யானை மட்டும் தொடர்ந்து அங்கேயே இருக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கான தடை நீடிக்கிறது. ஒற்றை காட்டு யானையின் நடமாட்டத்தை வனத் துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
தொடர் விடுமுறையால் கொடைக்கானலுக்கு அதிக அளவில் வரும் சுற்றுலாப் பயணிகள் பேரிஜம் ஏரிக்குச் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
