

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| அம்மன் அர்ச்சுணன் | அதிமுக |
| சண்முகசுந்தரம் | திமுக |
| அப்பாதுரை | அமமுக |
| தங்கவேலு | மக்கள் நீதி மய்யம் |
| கோ.பா.பாலேந்திரன் | நாம் தமிழர் கட்சி |
கோவை மாவட்டத்தின் மற்றொரு முக்கியத் தொகுதி கோவை வடக்கு. தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரிசையில் 118-வது இடத்தில் உள்ளது. கோவை மாநகராட்சியின் 19 வார்டுகள் மேற்கண்ட தொகுதியில் வருகின்றன. முருகப்பெருமானின் 7-வது படை வீடு என்றழைக்கப்படும் மருதமலை முருகன் கோயில் இந்தத் தொகுதியில் தான் அமைந்துள்ளன. லாலி சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம் ஆகிய முக்கிய கல்வி மையங்கள் இந்தத் தொகுதியில் அமைந்துள்ளன.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இத்தொகுதிக்கு மட்டுமின்றி, தமிழகத்துக்கே அடையாளம் ஆகும். இந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சியின் வார்டுகள் வருவதை போல், குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிராமப்புறப் பகுதிகளும் வருகின்றன. கவுண்டர் சமூக இன மக்கள் இத்தொகுதியில் அதிகளவில் வசிக்கின்றனர். அதேபோல், இதர சமூகத்தைச் சேர்ந்த மக்களும் இத்தொகுதியில் குறிப்பிட்ட அளவு வசிக்கின்றனர். இத்தொகுதியில் மாநகர எல்லையை ஒட்டிய புறநகரப் பகுதிகளில் தொழிற்கூடங்கள் அதிகளவில் உள்ளன. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவில் இந்தத் தொகுதியில் உள்ளன.
தொகுதியில் உள்ள இடங்கள்:
இந்தத் தொகுதியில் கோவை வடக்கு தாலுக்காகவுக்கு உட்பட்ட குறிப்பிட்ட பகுதிகள், வீரகேரளம், தெற்கு தாலுக்காவுட்பட்ட குறிப்பிட்ட பகுதிகள் வருகின்றன. அது தவிர, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 41, 44, 45, 46, 47, 48, 49 ஆகிய வார்டுகள் வருகின்றன.
கோரிக்கைகள்:
கடந்த 2011-ம் ஆண்டு மாநகராட்சியுடன் 3 நகராட்சி, 7 பேரூராட்சிகள், ஒரு ஊராட்சி என 11 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டன. இதில் வடவள்ளி, பேரூராட்சி ஆகிய பகுதிகள் மேற்கண்ட தொகுதியை மையப்படுத்தி அமைந்துள்ளன. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மேற்கண்ட இணைப்புப் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகள் போதியளவுக்கு இல்லை. சாலை வசதி, சாக்கடை வசதி, மழைநீர் வடிகால் வசதி போன்றவை முறையாக மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நீண்ட நாள் கோரிக்கையான ரத்தினபுரி ஜீவானந்தம் பாலம் திறக்கப்பட்டுள்ளது மக்களிடம் வரவேற்பபை பெற்றுள்ளது. அதேசமயம், முன்பு இருந்த மின்வெட்டு தற்போது இல்லையென்றாலும், தொழில்துறையில் ஜாப் ஆர்டரை அதிகரிக்க, 10 இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைத்துத் தர வேண்டும், உற்பத்தி இழபப்பை குறைக்க 25 சதவீதம் உற்பத்திப் பொருட்களை அரசே கொள்முதல் செய்து தர வேண்டும். மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் அல்லது சலுகை முறையில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது இங்குள்ள தொழில்துறையினரின் முக்கிய கருத்தாகும். அதிகளவில் பக்தர்கள் வந்து செல்லும் மருதமலை முருகன் கோயிலில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும், அடிவாரத்தில் இருந்து மேலே மலைக்கு பக்தர்கள் எளிதாக சென்று வர ரோப்கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் இங்கு பயன்பாட்டில் இருந்தாலும், தொகுதிக்குட்பட்ட வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வராமல் தட்டுப்பாடு நிலவுவதாக மேற்கண்ட தொகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகின்றன. இத்தொகுதியில் நிலவும் மற்றொரு முக்கியப் பிரச்சினை போக்குவரத்து நெரிசல். குறிப்பாக, பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் போன்ற கல்வி மையங்களை கொண்டுள்ள மேற்கண்ட சாலைகள், வாகன எண்ணிக்கைக்கு போதுமானதாக இல்லை.
பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு நிலத்தை வழங்கிய உரிமையாளர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு இழப்பீட்டுத் தொகை இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. அதேபோல், குடியிருப்புகளை ஒட்டியவாறு வரும் வனவிலங்குகளின் நடமாட்டத்தை தடுக்கவும் முழு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்..
தமிழக வீட்டு வசதி வாரியத்தின் புறநகர் திட்டத்தின் கீழ், கோவை கணபதி மாநகர் பகுதியில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டதில் முழுத் தொகையையும் செலுத்திய பயனாளிகளுக்கு வீடுகளுக்கான பத்திரம் கிடைக்கவில்லை என்பது தொடரும் குற்றச்சாட்டாக உள்ளது. இங்குள்ள பழுதடைந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல குடியிருப்புகளை சீரமைத்துத் தர வேண்டும் என்பதும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
தேர்தல் வரலாறு
இந்தத் தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த பி.ஆர்.ஜி அருண்குமார் 77,540 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த மீனா லோகு 69,816 வாக்குகள் பெற்றார்.
பாஜக சார்பில் போட்டியிட்ட கண்ணன் என்ற எஸ்.தேவராஜ் 16,741 வாக்குகளும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட பி.முருகன் 12,153 வாக்குகளும் பெற்றார். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த மலரவன் 93,276 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த வீரகோபால் 53,178 வாக்குகள் பெற்றார்.
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | பி.ஆர்.ஜி.அருண்குமார் | அதிமுக |
| 2 | மீனாலோகு | திமுக |
| 3 | எஸ்.எம். முருகேசன் | தேமுதிக |
| 4 | காமராஜ் நடேசன் | பாமக |
| 5 | கண்ணன் (எ) எஸ்.தேவராஜ் | பாஜக |
| 6. | சி.பி.பாலேந்திரன் | நாம் தமிழர் |
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,69,287 |
| பெண் | 1,66,979 |
| மூன்றாம் பாலினத்தவர் | 38 |
| மொத்த வாக்காளர்கள் | 3,36,304 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | மலரவன்.T | அதிமுக | 93276 |
| 2 | வீரகோபால்.M | திமுக | 53178 |
| 3 | சுப்பையன்.G.M | பாஜக | 4910 |
| 4 | துரைராஜ்.K | லோக் சட்ட கட்சி | 1887 |
| 5 | சதிஷ்குமார்.T | உழைப்பாளி மக்கள் கட்சி | 975 |
| 6 | சாமிநாதன்.M.S | சுயேச்சை | 748 |
| 7 | புஷ்பனந்தம்..V | பகுஜன் சமாஜ் கட்சி | 308 |
| 155282 |