Published : 08 Mar 2021 05:55 AM
Last Updated : 08 Mar 2021 05:55 AM

ராஜபாளையத்தில் அதிமுக, பாஜக போட்டி பிரச்சாரம்

தொகுதி பங்கீடு முடிந்தாலும் யார் எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்ற விவரம் வெளியிடப்படாததால் ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் பாஜகவினரும், அதிமுகவினரும் போட்டிபோட்டு சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அது எந்தெந்த தொகுதிகள் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும், ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை கவுதமி பாஜக சார்பில் போட்டியிடுவதாகத் தகவல்கள் வெளியாகின.

அதையடுத்து, அவர் கடந்த 2 மாதங்களாக ராஜபாளையத்தில் குடியேறி கட்சிப் பணிகளைத் தொடங்கினார். ராஜபாளையம் மட்டுமின்றி தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களிலும் பாஜகவினர் தங்களது கட்சி சின்னமான தாமரை சின்னத்தை வரைந்து பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த வாரம் பேட்டியளித்த நடிகை கவுதமி, கட்சியின் மேலிட உத்தரவின்பேரில் தான் கட்சிப் பணிகள், பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி போட்டியிட உள்ளதாகக் கூறி அக்கட்சியினர் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

அதிமுகவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாத நிலையில் ராஜபாளையம் தொகுதியில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடு வீடாகத் தொண்டர்கள் இரட்டை இலை சின்னம் வரைந்து உற்சாகமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அதிமுக, பாஜக கூட்டணியினரிடையே குழப்பமும், கருத்து வேறுபாடும் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x