Published : 08 Mar 2021 05:44 AM
Last Updated : 08 Mar 2021 05:44 AM

திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும், திமுக ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை மீது அதிருப்தியிலேயே இருந்தன. அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துக்கொண்டதால், திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க முடியாத நிலை இந்த கூட்டணி கட்சிகளுக்கு ஏற்பட்டது. அதனால், அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெறுவதை தடுக்க ஒரே வழி திமுகவுடன் கூட்டணி வைப்பது மட்டும்தான் என்ற முடிவுக்கு கூட்டணி கட்சிகள் வந்தன.

இந்த சூழலில்தான் திமுக ஒதுக்கிய 25 தொகுதிகளை காங்கிரஸும், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா 6 தொகுதிகளையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளையும் பெற்றுக்கொண்டன. தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தாங்கள் கேட்கும் தொகுதிகளை தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. பெரும்பாலான கூட்டணிக் கட்சிகள் கொடுத்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டிருப்பது, திமுகவுக்கு புது தெம்பை கொடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிச்சயம் இறங்கி வரும் என திமுக நம்புகிறது.

2001, 2006, 2011 ஆகிய 3 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்ற கூட்டணியே வெற்றி பெற்றது. அடுத்த சில ஆண்டுகளில் கூட்டணியை விட்டு வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆளுங்கட்சியை விமர்சித்து வந்தது. ஆளுங்கட்சி ஆதரவு இல்லாததால், அந்த தொகுதிக்கு நலத் திட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் செயல்படுத்த முடியவில்லை. இதையும் திமுக கருத்தில்கொண்டுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அதிமுக- பாஜக கூட்டணியை தோற்கடிப்பதற்காக அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கிறோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் உரிய மதிப்பு கொடுத்து, அவர்களையும் திமுக அரவணைத்து செல்ல வேண்டும். ஆனால், கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற ரீதியில் திமுக கூறுவதை பார்க்கும்போது, அதனிடம் ஆதிக்க மனோபாவம் வெளிப்படுவது தெரிகிறது. அதை கைவிட வேண்டும்.

ஒரு லட்சியத்துக்காக கூட்டணி வைக்கிறோம். அந்த லட்சியம் நிறைவேறிய பின்னர், கூட்டணிக்கு தலைமை வகித்த கட்சி ஆட்சியில் இருக்கும்போது, அந்த ஆட்சியில் நடைபெறும் தவறுகளை, மக்களுக்கு எதிரான சில திட்டங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. எதிர்க்கத்தான் செய்வோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x