Published : 08 Mar 2021 05:41 AM
Last Updated : 08 Mar 2021 05:41 AM

‘மேடம் இருந்தா இப்படி நடக்குமா?’ 

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ளது அதிமுகவின் தலைமை அலுவலகம். தற்போது சட்டப்பேரவைத் தேர்தலுக்குக் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் என அதிமுக தலைமை அலுவலகம் விழாக் கோலத்திலேயே காட்சியளிக்கிறது.

இங்கு, நிர்வாகிகள், காவலர்கள், செய்தியாளர்கள் பயன்படுத்துவதற்கான கழிவறை அலுவலகத்தின் பின்னால் உள்ளது. ஆனால், ஒரே நேரத்தில் பல நிர்வாகிகள் கழிவறையைப் பயன்படுத்துவதால் அப்பகுதியே துர்நாற்றம் வீசுகிறது.
அதேபோல், கழிவறைக்குக் கதவுகள் இல்லாததால் நிர்வாகிகள் எப்படி அதனைப் பயன்படுத்துவது என்று திக்குமுக்காடி வருகின்றனர்.

இதற்கிடையே, கூட்டத்துக்கு நடுவே கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம் என்று அலுவலகத்தில் உள்ள கேன்டீனுக்கு வரும் அமைச்சர்கள் கீழே இருக்கும் கழிவறைக்குச் செல்ல முற்பட்டால், பாதுகாப்பில் உள்ள காவலர்கள், ‘இந்த கழிவறை வேண்டாம் சார். நீங்கள் மேலே உள்ள கழிவறையைப் பயன்படுத்துங்கள்’ என்று தடுத்து நிறுத்துவதையும் காண முடிகிறது. மேலும், கழிவறையைப் பயன்படுத்தும் நிர்வாகிகள் ‘இந்த கதவ முதல சரி பண்ணுங்கப்பா’ என்று கோபத்துடன் சொல்வது வாடிக்கையாக நடைபெறுகிறது.

மேலும், பெண் செய்தியாளர்கள், பெண் காவலர்களுக்கென தனி கழிவறை இல்லை. இதனால் பணியில் உள்ள பெண்கள் தர்மசங்கடத்துக்கு ஆளாகும் நிலையும் ஏற்படுகிறது. 'மேடம் (ஜெயலிலதா) இருந்தால் இப்படிலாம் இருக்குமா?' என்று சில பெண் காவலர்கள் அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டே அலுவலகத்தின் மாடியில் உள்ள கழிவறைக்கு சென்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x