Last Updated : 07 Mar, 2021 03:14 AM

 

Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

பாஜக சார்பில் மீண்டும் பொன் ராதாகிருஷ்ணன் போட்டி: கன்னியாகுமரி தொகுதியில் 8வது முறையாக களமிறங்குகிறார்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில், பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடவுள்ளார். இதன்மூலம் 1991-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக பாஜகவின் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இத்தொகுதியில், 2019-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற எச்.வசந்தகுமார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி கரோனாதொற்றால் உயிரிழந்தார். எனவே, சட்டப்பேரவைத் தேர்தலோடு சேர்த்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதனால், தேசிய தலைவர்களின் பார்வை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின்பக்கம் திரும்பியுள்ளது இத்தொகுதியில் தேசிய கட்சிகளே போட்டியிடுவது வழக்கம். கடந்த தேர்தலில் வசந்தகுமாருடன் போட்டியிட்டு தோல்வியடைந்த பொன் ராதாகிருஷ்ணன், மீண்டும்இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவுள்ளார். இதனை, பாஜக தலைமை நேற்று அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 8 முறை போட்டியிட்டுள்ளார். 1999-ம் ஆண்டில் திமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது வெற்றிபெற்ற பொன் ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சராக இருந்தார். அடுத்து, 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வெற்றிபெற்று மத்திய இணை அமைச்சராக இருந்தார்.

இத்தொகுதியில் பாஜகவின் 30ஆண்டுகால வேட்பாளர் என்றபெருமையையும் பொன் ராதாகிருஷ்ணன் பெற்றுள்ளார்.

பொன் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ``கட்சித் தலைமை என் மீதுவைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கெனவே முன்னெடுத்த அத்தனை பணிகளையும் நிறைவேற்றி, இந்தியாவின் முதன்மையான மாவட்டமாக கன்னியாகுமரியை மாற்ற முயற்சிப்பேன்”என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x