Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

ரங்கசாமி முடிவுக்காக பாஜக காத்திருப்பு; என்.ஆர்.காங்கிரஸுக்கு ஆதரவா?- காங். தலைவர் சுப்பிரமணியன் மறுப்பு; புதுச்சேரி அரசியலில் திருப்பம்

என்.ஆர்.காங்கிரஸூடன் பாஜக, அதிமுக கூட்டணி அமைத்து புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலைசந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

பாஜகவின் நிலை என்ன?

“பாஜக கூட்டணியில் தான் ரங்கசாமி இருப்பார்” என புதுவை பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். ஆனால் ரங்கசாமியிடம் இருந்து இதுவரை சாதகமான பதில் வரவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் நேற்று கூறுகையில், ‘‘ரங்கசாமியுடன் கூட்டணி அமைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதுகுறித்த அறிவிப்பை ரங்கசாமிதான் தெரிவிக்க வேண்டும்.அவர் தனது தேவை தொடர்பாக இதுவரை எங்களிடம் சரியான பதிலை தெரிவிக்கவில்லை. எங்களது முயற்சி முடிந்தது. கூட்டணிக்கு ரங்கசாமிவராவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பாஜக மேலிடம் முடிவு செய்யும்’’ என்றார்.

காங்கிரஸின் நிலை என்ன?

இதற்கிடையே, காங்கிரஸ் தரப்பில் இருந்து என்.ஆர்.காங்கிரஸூக்கு அழைப்பு விடுப்பதாக தகவல் பரவியது.

இந்நிலையில் 2 தினங்களுக்கு முன் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காரைக்கால் பகுதி திமுக அமைப்பாளர் நாஜிம், “காங்கிரஸ், திமுகவுடன் என்.ஆர்.காங்கிரஸ் இணைந்து புதிய கூட்டணி அமைக்கலாம்; அதற்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைமையேற்க வேண்டும். நாராயணசாமியிடம் இதுபற்றி பேசினேன். அவர், தனக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்திருக்கிறார் ” என்று கூறினார். இதற்கு நாராயணசாமி தரப்பில் இருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை.

இதற்கிடையே, நேற்று காலைதனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், ‘ரங்கசாமியுடன் கைகோர்க்க காங்கிரஸ் தயார்’ என்று கூறியதாக தகவல் வெளியானது.

ஆனால், இதை ஏ.வி.சுப்பிரமணியன் மறுத்திருக்கிறார். “திமுக அமைப்பாளர் நாஜீம் வெளியிட்டிருக்கும் வீடியோ தொடர்பாக என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, பாஜகவை வீழ்த்தும் வகையில் மதச் சார்பற்ற கூட்டணி உருவானால் அதனை ஏற்பதில் காங்கிரஸூக்கு தயக்கம் இல்லை என்று தான் கூறினேன். ஒருவேளை என்.ஆர்.காங்கிரஸ் வரும் பட்சத்தில், அது பற்றி கட்சித் தலைமை தான் முடிவெடுக்கும்“ என்று தெரிவித்தார்.

மொத்தத்தில் ரங்கசாமியை மையமாகக் கொண்டு புதுச்சேரி அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x