Published : 03 Mar 2021 03:22 AM
Last Updated : 03 Mar 2021 03:22 AM

அதிமுகவில் வாரிசுகளுக்கு சீட் இல்லை?- கறார் காட்டும் தலைமையால் சீனியர்கள் அதிர்ச்சி

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத், அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன், மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன்செல்லப்பா மகன் ராஜ்சத்யன் உள்ளிட்டோர் களமிறக்கினர்.

அதேபோல் வரும் பேரவைத் தேர்தலிலும் அமைச்சர்கள், 2-ம் கட்டத் தலைவர்கள் தங்களது வாரிசுகளுக்கும் சீட் கேட்டு தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் நின்று தோற்ற வாரிசுகள் இருவருக்கும், இம்முறையும் சீட் கேட்டு வருகின்றனர்.

இதுதவிர ஓ.பன்னீர்செல்வத்தின் 2-வது மகன் ஜெயபிரதீப் மற்றும் அமைச்சர்கள் ஜி.பாஸ்கரன், திண்டுக்கல் சீனிவாசன், திருச்சி வெல்லமண்டி நடராஜன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டேரின் வாரிசுகளுக்கும் சீட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் கோபம் அடைந்த அதிமுக தலைமை, இந்த தேர்தலில் வாரிசுகளுக்கு சீட் கிடையாது. மேலும் ‘உங்களது மகன்களுக்கு சீட் கொடுத்தால், உங்களுக்கு இடம் இல்லை,’ என சீட் கேட்டுச் சென்ற அமைச்சர்கள், தலைவர்களிடம் கட்சித் தலைமை கறாராகத் தெரிவித்து விட்டதாக தென்மாவட்ட அமைச்சர் ஒருவரும், மாவட்டச் செயலாளர் ஒருவரும் தங்கள் ஆதரவாளர்களிடம் குமுறி உள்ளனர். அதிமுக தலைமையின் திடீர் பிடிவாதம், 2-ம் கட்ட நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x