Last Updated : 02 Mar, 2021 01:35 PM

 

Published : 02 Mar 2021 01:35 PM
Last Updated : 02 Mar 2021 01:35 PM

கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கும் கமல்ஹாசன்? பின்னணி என்ன?

கோவை தெற்கு தொகுதியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் போட்டியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று ஏற்கெனவே கூறியிருந்தார். அவரே கட்சியின் முதல்வர் வேட்பாளர் என மக்கள் நீதி மய்யமும் அறிவித்துள்ளது. இதனால் கமல்ஹாசன் மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடக் கூடும் எனத் தகவல் வெளியானது.

இதற்குக் காரணமும் உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதிக்குட்பட்ட மயிலாப்பூர் , தி.நகர் தொகுதிகளில் கணிசமான வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றிருந்தது. இதுபோலவே ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றது.

அதுபோலவே கோவை மக்களவைத் தொகுதியிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றிருந்தது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுவதற்கான தொகுதியை முடிவு செய்ய கட்சித் தொண்டர்களிடம் கருத்துக் கேட்பு நடைபெறுகிறது.

இந்தப் பின்னணியில் ஆலந்தூர் மற்றும் கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது. இதில் கோவை தெற்கு தொகுதியைத் தேர்வு செய்தன் பின்னணியில் சில காரணங்களும் உள்ளன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கோவை மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சேர்த்து மொத்தமாக 1,45,082 வாக்குகளைப் பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் 64,453 வாக்குகளையும், பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் 46,368 வாக்குகளையும் பெற்றனர். அதேசமயம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் 23,838 வாக்குகளைப் பெற்றார். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டு சதவீத அடிப்படையில் பார்ததால் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது.

இந்தத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்துக்கு வலுவான வாக்கு வங்கி இருப்பதாலும், பல்வேறு மொழி பேசும் மக்கள் வசிக்கும் தொகுதி என்பதாலும் கோவை தெற்கு தொகுதியை கமல்ஹாசன் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

சிறிய தொகுதியாக இருப்பதால் பிரச்சாரம் செய்வதும், மக்களைச் சென்றடைவதும் மிகவும் எளிதாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே கோவை தெற்கு தொகுதியைக் குறிவைத்து மக்கள் நீதி மய்யம் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x