Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

2 கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை: பிரேமலதா அவசர ஆலோசனை; தேமுதிக முடிவில் மாற்றம்?

அதிமுகவுடன் நடந்த 2 கட்டபேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால், தேமுதிகவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, அதிமுக அமைச்சர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, தேமுதிக மூத்த நிர்வாகிகள் நேற்று முன்தினம் இரவு அமைச்சர் தங்கமணியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தேமுதிக தரப்பில் 30 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், அதிமுக தரப்பில் 14 தொகுதிகள் வரை மட்டுமே வழங்க முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் சென்னையில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. அதிமுகவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்படாத சூழலில் வேறு கூட்டணி அல்லது தனித்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகளிடம் கேட்ட போது, ‘‘கூட்டணி தர்மத்துக்கு மதிப்பு அளித்து தேமுதிக இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் கணிசமாக வாக்குகளை கொண்ட கட்சியாகவும், 3-வது கட்சியாகவும் தேமுதிக இருந்து வருகிறது. இதற்கு முன்பு கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, சிறப்பான வெற்றியை பெற்றது. அதைத் தான் நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம். ஆனால், மிகவும் குறைந்த அளவிலேயே தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளது. தேமுதிக மூத்த நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அதிமுகவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கையில் தேமுதிக இறங்கும்’’என்றனர்.

விஜயகாந்த் 3 நாட்கள் நேர்காணல்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்தவர்களிடம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வரும் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில் நேர்காணல் நடத்தப்படுகிறது. கோவை, நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 6-ம் தேதி காலை 10.35 மணிக்கும், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மதியம் 2 மணிக்கும் நேர்காணல் நடக்கிறது.

இதேபோல், 7-ம் தேதி காலை 9 மணிக்கு தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கும், மதியம் 2 மணிக்கு தஞ்சாவூர், சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடக்கும். 8-ம் தேதியில் காலை 9 மணிக்கு மதுரை,திண்டுக்கல், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கும், மதியம் 2 மணிக்கு திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x