Last Updated : 02 Mar, 2021 03:13 AM

 

Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

முதல்வர் பழனிசாமி - ஓபிஎஸ் மார்ச் 8-ல் வேட்பாளர் பட்டியலை வெளியிட ஆலோசனை

பாஜக, தேமுதிக, தமாகா மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்தும், தேர்தல் அறிக்கை தொடர்பாகவும் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

பாஜக, தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக தமாகாவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து பேசப்பட உள்ளது. இதுதவிர,கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசுக்கட்சி, ஜான்பாண்டியன் கட்சி உள்ளிட்ட சிறு கட்சிகளுக்கும் கூட்டணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், நேற்று காலை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் வந்து ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற முன்னணியின் தலைவர் டாக்டர் சேதுராமன் அதிமுக அலுவலகத்தில், வந்து பேச்சுவார்த்தை நடத்தி 2 தொகுதிகள் வரை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கூட்டணியை இறுதி செய்துவிட்டு, விரைவாக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்கான பணியில் அதிமுக இறங்கியுள்ளது. விருப்ப மனுக்கள் பெற்று வரும் நிலையில், விரைவாக நேர்காணல் நடத்தி, வரும் மார்ச் 8-ம் தேதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x