Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்கு கோயில்களுக்கு சொந்தமான வாகனங்கள் வழங்கப்படாது: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி தகவல்

சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்கு கோயில்களுக்கு சொந்தமான வாகனங்கள் வழங்கப்படாது என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரத்து 121 கோயில்கள் உள்ளது. இவற்றில், சென்னை வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்பட பல்வேறு கோயில்களுக்கு சொந்தமாக கார் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளது. கோயில் வளர்ச்சி பணிகளுக்கு பணியாற்ற இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளுக்கு அரசு துறைகளின் வாகனங்கள் பயன்படுத்துவது வழக்கம். இந்த சூழலில், தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்த கோயில்களுக்கு சொந்தமான வாகனங்கள் வழங்கப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''கோயில்களுக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனங்கள் இறைவனுக்கு சொந்தமுடையதாகும் என்ற நிலைப்பாட்டிலும் இவ்வாகனங்கள் அரசுக்கு சொந்தமானவை அல்ல என்ற நிலைப்பாட்டிலும் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கிணங்க பொதுப்பணிகளுக்காக பயன்படுத்த கூடாதவை என்ற நிலைப்பாட்டிலும் மாவட்ட நிர்வாகங்கள் தேர்தல் பணிகளுக்காக கோயில்களுக்கு சொந்தமான வாகனங்களை பயன்படுத்தி கொள்ள கோரும் நிலையில் கோயில்களின் செயல் அலுவலர்கள் வழங்க மறுக்கலாம் என்று கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது அப்போதைய ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவு தற்போதைய தேர்தலுக்கும் பொருந்தும். எனவே, சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்கு கோயில்களுக்கு சொந்தமான வாகனங்கள் வழங்கப்படாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x