Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM

மதிமுக, விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்?- திமுகவுடன் இன்று பேச்சு; மதிமுக சார்பில் 4 பேர் குழு அமைப்பு

ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுடன் கடந்த 25-ம் தேதி திமுக பேச்சு நடத்தியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,மனித நேய மக்கள் கட்சியுடன் நேற்றுதிமுக பேச்சு நடத்தியது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் பேச்சு நடத்தினர். தொகுதிபங்கீடு குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று மதிமுக, விசிகவுடன் திமுக பேச்சு நடத்தவுள்ளது. மதிமுகவும், விசிகவும் தலா 10 தொகுதிகள் கேட்கும் நிலையில், இரு கட்சிகளுக்கு தலா 6 அல்லது 7 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று பேச்சு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் திமுகவுடன் பேச்சுநடத்த மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “வரும் ஏப்ரல் சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மதிமுகசார்பில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஆய்வு மய்ய செயலாளர் மு. செந்திலதிபன், உயர்நிலைக் குழு உறுப்பினர் கு. சின்னப்பா, தேர்தல் பணிச் செயலாளர் ஆவடி அந்திரிதாஸ் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x