Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

அதிமுகவில் 4 நாட்களில் 3700-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் விநியோகம்

தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வரும் மார்ச் 12-ம் தேதி தொடங்கி 19-ம் தேதியுடன் முடிவடைகிறது. முன்னதாக, தேர்தல் அறிவிப்பை எதிர்நோக்கி, அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் கடந்த பிப்.24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த தினத்தன்று முதல்வர், துணை முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் நாள் முகூர்த்த நாள் என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனுக்களை பெற்று விண்ணப்பித்தனர். ஒவ்வொரு தொகுதியிலும், முதல்வர், துணை முதல்வர் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தும் பல மனுக்கள் வழங்கப்பட்டன.

எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி, போடிநாயக்கனூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடவும் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மனுக்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், 4-ம் நாளான நேற்று வரை 3 ஆயிரத்து700-க்கும் அதிகமான மனுக்கள் விநியோகிக்கப்பட்டு பெரும்பான்மை பூர்த்தி செய்து திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதால், அதிமுக போட்டியிட உறுதியாகும் தொகுதிகளில் அதிகளவில் மனுக்கள் பெறப்படும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x