Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

தேர்தல் ஆணையம் பாரபட்சம்: டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

‘சின்னம் வழங்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுகிறது. எந்த அரசியல் கட்சிக்கும் நிரந்தரச் சின்னம் கூடாது. ஆண்டுக்கு ஒரு முறை புதிய சின்னத்தை ஒதுக்க வேண்டும்' என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தேவேந்திர குல வேளாளர்களைப் பட்டியல் இனத்தில் இருந்து நீக்கி பொதுப்பிரிவில் சேர்க்க வேண்டும் எனக் கோரி கடந்த 30 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில் பட்டியல் இனத்தவருக்கு 2 சதவீதம் உள் ஒதுக்கீடு கொடுத்ததால் எந்தச் சலுகையும் கிடைக்கவில்லை. தவறுதலாகப் பட்டியல் இனத்தில் தேவேந்திரகுல வேளாளர்களைச் சேர்த்ததால் சமுதாயத்தில் ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளனர். இதனால், மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பொதுப்பிரிவில் தேவேந்திரகுல வேளாளர்களைச் சேர்க்க வேண்டும். எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவித இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் தேவையில்லை. இந்திய தேர்தல் ஆணையம் முற்றிலும் செயல் இழந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள பெரிய அரசியல் கட்சிகள் விதிமுறைகளை மீறி கடந்த ஓராண்டுக்கு முன்பே தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன. சின்னம் வழங்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுகிறது. எந்த அரசியல் கட்சிக்கும் நிரந்தரச் சின்னம் கூடாது. ஆண்டுக்கு ஒரு முறை புதிய சின்னத்தை ஒதுக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்குகின்றன. பண பலத்துடன் இருக்கும் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறுகின்றன என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x