Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: பாமக தலைமை முடிவு

கி.கண்ணன்

தொகுதியில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க பாமக தலைமை முடிவு செய்துள்ளது.

அதிமுகவுடன் இணைந்தே சட்டப்பேரவைத் தேர்தலை பாமக சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பாமகவினர் கூறுகின்றனர். வன்னியர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு மற்றும் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்பதால் கூட்டணி அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பாமக சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் கட்சியின் தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பாக பாமக மூத்த தலைவர்கள் கூறியதாவது:

பாமக விருப்ப மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. பாமக சார்பில் தேர்தலில் போட்டியிட விருபுபவர்கள் மனுக்களை பெறலாம். இந்த முறை வேட்பாளர்கள் தேர்வில் அதிக கவனம் செலுத்தப்படும். பாமக போட்டியிடும் தொகுதிகளில் மக்களிடம் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உள்ள நபருக்கே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். வடமாவட்டங்களில் பாமகவுக்கு தொகுதிகளை ஒதுக்குமாறு அதிமுகவிடம் கேட்டிருக்கிறோம். பாமகவின் பலம் குறையவில்லை. இந்த தேர்தலில் பாமகவின் பலம் நிரூபிக்கப்படும். கண்டிப்பாக இந்த முறை பாமக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருப்பார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x