Last Updated : 18 Feb, 2021 03:18 AM

 

Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM

பாஜகவைவிட அதிக தொகுதிகள் கேட்கும் பாமக

அதிமுகவுடன் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க பாமக முடிவு செய்துள்ளது. ஆனால், வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு விஷயத்தில் தீர்வு எட்டப்படாததால் கூட்டணி அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் வன்னியர் உள் இடஒதுக்கீடு பேச்சுவார்த்தையின்போதே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. 32 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். இதில், 25-க்கும் மேற்பட்ட தொகுதிகள் வடமாவட்டங்களில் இருக்க வேண்டுமென பாமக குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதிமுக தரப்பில் 21 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடைசியாக 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக 30 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், ஜெயங்கொண்டம், செஞ்சி, அணைக்கட்டு ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி உட்பட அனைவரும் தோல்வியடைந்தனர். முன்பு இருந்ததைவிட தற்போது பாமகவின் பலம் குறைந்துள்ளதாலும், இன்னும் சில கட்சிகள் கூட்டணிக்கு வரவிருப்பதாலும் பாமகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாமக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, “அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 25 தொகுதிகள் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இதே கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. தற்போது பாஜகவைவிட குறைவாக பாமகவுக்கு தொகுதிகள் ஒதுக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாஜகவைவிட அதிகமான தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்க வேண்டும்.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக 30 தொகுதிகளில் போட்டியிட்டது. எனவே, 32 தொகுதிகளை பாமகவுக்கு கொடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x