Last Updated : 16 Feb, 2021 03:12 AM

 

Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM

சி.வி.சண்முகத்தை எதிர்த்து பொன்முடி போட்டி?

விழுப்புரம் அருகே காணை குப்பம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது, “கருணை அடிப்படையில் மாவட்ட கோட்டாவில் அமைச்சரானவர் சி.வி.சண்முகம். தனது பதவியை பயன்படுத்தி இந்த விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு சண்முகம் என்ன செய்தார் என்று விளக்க முடியுமா? ஊருக்கு சவால் விடுவது இருக்கட்டும். சொந்த ஊருக்கு சண்முகம் என்ன செய்தார்? என்று சொல்ல வேண்டும்” என்று எப்போதும் இல்லாத அளவுக்கு அமைச்சரை கடுமையாக விமர்சித்தார்.

எதற்காக இந்த அளவுக்கு விமர்சனம் என்று விழுப்புரம் மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “விழுப்புரம் தொகுதியில் 2 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற சி.வி.சண்முகம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. ‘‘அதிமுக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் திமுகவே எதிர்த்து போட்டியிடும்’’ என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அந்த வகையில் விழுப்புரம் தொகுதியில் சி.வி.சண்முகத்தை பொன்முடியால் மட்டுமே வெல்ல முடியும் என நம்புகிறோம்.

விழுப்புரம் தொகுதியில் பொன்முடி போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்புதான் புதிய பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், மாவட்டம் முழுவதும் சிமெண்ட் சாலை, குடிநீர் திட்டங்கள், மருத்துவக் கல்லூரி பொறியியல் கல்லூரிகள், அரசு கலைக் கல்லூரிகளில் முதுகலை படிப்புகள் கொண்டு வரப்பட்டன. நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டம் என பணிகளை பட்டியலிடலாம்” என்றனர்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “மாவட்டத்தில் சட்டக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகள், ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம், நந்தன் கால்வாய், வீடூர் அணை புனரமைப்புப் பணிகள், கோலியனூரான் வாய்க்கால் தூர்வார தனித்திட்டம் ஆகியவற்றால் சி.வி.சண்முகத்துக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு, விவசாயக்கடன் தள்ளுபடி, பொங்கல் பரிசு என்று பட்டியலிடலாம். 2011 தேர்தலில் சி.வி.சண்முகத்திடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்த பொன்முடி, 2016 தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இப்போது மீண்டும் சி.வி.சண்முகத்திடம் மோத வைக்க திமுக தலைமை எண்ணினால், அதை கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x