Published : 28 Mar 2019 07:06 AM
Last Updated : 28 Mar 2019 07:06 AM

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ஓபிஎஸ் மகனுக்கு சீட் கிடைத்திருக்குமா?- பெரியகுளம் கூட்டத்தில் ஸ்டாலின் கேள்வி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்கு தேனியில் நிற்க சீட் வாங்கியிருக்க முடியுமா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் சரவணக்குமார் ஆகியோரை ஆதரித்து பெரியகுளத்தில் அவர் பேசியது:

ஈரோட்டின் பூகம்பம் தந்தை பெரி யாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் ஈவிகேஎஸ் இளங்கோவன். வழக்கு களைக் கண்டு அஞ்சாமல் வெளிப் படையாகப் பேசக் கூடியவர். திறமை, தைரியம், போராட்ட குணமிக்கவர்.

ஆனால், அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்துக்கு ஓபிஎஸ் மகன் என்பதைத் தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இவருக்கு சீட் கிடைத்திருக்குமா. ஆட்சிக்கு எதிராக வாக்களித்து தற்போதும் பதவியில் உள்ளவர்கள் மீது திமுக தொடர்ந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும்.

ஜெயலலிதா மர்ம மரணம் அடைந் தார். ஜெயலலிதா மூலம் தினகரன், சசிகலாகவுக்காக ஊழல்களைச் செய்து அவர்களிடம் கோடி கோடியாக பணத்தைக் கொட்டியவர்கள் நீங்கள்தானே. இன்றைக்கு போடி, சோத்துப்பாறை பகுதி மட்டுமல்லாது பல பகுதிகளிலும் காபித் தோட்டம், எஸ்டேட் என்று ஓ.பன்னீர்செல்வம் சொத்துகளை வாங்கி குவித்து வருகிறார்.

கஜா புயல் நிவாரணத்துக்கு கூட மத்திய பாஜக அரசிடம் உரிய நிதியைப் பெறவில்லை. தமிழகத்தை பாஜகவிடம் அடகு வைத்தவர்கள். ஜிஎஸ்டியில் தமிழகத்துக்கான வரிப்பங்கை கேட்டுப் பெறவில்லை.

மோடி நாட்டின் காவலாளி அல்ல. இதுபோன்ற குற்றவாளி களுக்குத்தான் காவலாளியாக இருந்து வருகிறார். இவர்களை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் இப் பகுதியில் வவ்வால் துறை அணைக் கட்டு, மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும். வராக நதி, சோத்துப்பாறை ஆகியவை தூர்வாரப்படும். தேனிக்கு திட்டச் சாலை நிறைவு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

என்னைச் சீண்டாதீர்கள்

பின்னர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியது: தேர்தல் வெற்றிக்குப் பிறகு நான் இங்கேதான் இருப்பேன். திமுக கூட்டணி மக்களுக்கு நல்வாழ்வு தரக்கூடிய கூட்டணி. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்று மோடி ஆட்சியின் அவலத்தை நான் உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மோடியை இந்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவோம். ஈபிஎஸ், ஓபிஎஸ் போன்றவர்களை ஆப்பிரிக்க கண்டத்துக்கு நாடு கடத்த வேண்டும். ஈரோட்டில் இருந்தால் நான் அந்நியனா, ஈரோடுதான் சமூக மாற்றத்துக்கு வித்திட்டது. என்னைச் சீண்டாதீர்கள். சாதனைகளைப் பேசுங்கள். அரசியல்ரீதியாக சந்திக் கத் தயார். தனிப்பட்ட தாக்குதல் கூடாது. பிஞ்சிலே பழுத்ததைப் பற்றி நானும் சொல்வேன். ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் விஷயமும் எனக்குத் தெரியும்.

ஸ்டாலின் கையில் தமிழகத்தை ஒப்படைத்தால் இங்குள்ளவர்களின் எதிர்காலம் சுபிட்சமாக இருக்கும். வாக்காளர்கள் அதிமுகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள். அந்தளவுக்கு இந்த ஆட்சி மீது மக்கள் வெறுப்பாக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x