Published : 21 Mar 2019 04:34 PM
Last Updated : 21 Mar 2019 04:34 PM

மதுரையில் தேர்தல் செலவுக்கு பணம் தருவார்களா? - கம்யூனிஸ்ட்கள் கனத்த மவுனத்தால் திமுக நிர்வாகிகள் தவிப்பு

மதுரை மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணிகளுக்கு செலவு செய்வது குறித்து மார்க்சிஸ்ட் வேட்பாளர் உட்பட கம்யூனிஸ்ட் கட்சியினர் தரப்பில் கனத்த மவுனம் நிலவுவதால், மாவட்ட திமுக நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.

மதுரை மக்களவைத் தொகுதி யில் திமுக கூட்டணி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். இவரைத் தேர்வு செய்ததில் அக்கட்சியினருக்கு திருப்திதான். திமுக நிர்வா கிகள் தரப்பிலும் திருப்தி தெரிவிக் கின்றனர்.

ஆனால், தேர்தல் பணியை எவ்வாறு மேற்கொள்வது என்பதில் தான் திமுக நிர்வாகிகளிடம் தவிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட் டத்தில் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வெங்கடேசன் ஆதரவு கேட்டு ள்ளார். சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அறிமுகக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் போதுமான அளவுக்கு கூட்டணிக் கட்சியினர் கூடுகின்றனர். முஸ்லி ம்களும் அதிக ஆர்வத்துடன் சு. வெங்கடேசனின் கூட்டங்களில் பங்கேற்கின்றனர். 2 நாட்களில் அறிமுகக் கூட்டம் முடிந்து விடும்.

நாளை (மார்ச் 22) வெங்கடேசன் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். அன்று முதலே பகுதி வாரியாக பிரச்சாரத் திட்டம் வகுக்கப்பட வேண்டும். தேசிய அளவில் கம்யூனிஸ்ட் தலைவர்கள், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் மதுரை பிரச்சாரத்துக்கு வரவுள்ளனர். இதற்காக பல பொதுக்கூட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டும். இதற்கான செலவை எவ்வாறு மேற்கொள்வது, யார் செய்வது எனத் தெரியாமல் திமுகவினர் தவித்து வருகின்றனர்.

இது குறித்து திமுக முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது: மார்க்சிஸ்ட் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய திமுகவினர் எந்தளவுக்கும் இறங்கி உழைக்கத் தயார். எனினும், தேர்தல் பணிக்கான அடிப்படைச் செலவுகள் உள்ளன. இதை திமுகவினர் யாரும், தங்கள் கைகளில் இருந்து செலவழிக்க முடியாத நிலை உள்ளது. அறிமுக கூட்டத்துக்கு அழைக்கவும், பிரச்சாரத்துக்கு வேட்பாளரை வரவேற்கவும், வார்டு வாரியாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும் என குறைந்தது 3 கட்டங்களாக கீழ்நிலை நிர்வாகிகளுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும். தேர்தல் நாளில் மேற்கொள்ளப்படும் செலவு தனி.

இந்த செலவுகளை மேற் கொள்ள, மார்க்சிஸ்ட் தரப்பில் எத்தகைய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என எந்தத் தகவலும் இல்லை. இதுகுறித்து வேட்பாளரோ, கட்சி நிர்வாகிகளோ வாய் திறக்க மறுக்கின்றனர். மார்க்சிஸ்ட் கட்சி என்பதால் பணம் கேட்பதற்கு திமுக முக்கிய நிர்வாகிகளிடையே தயக்கம் உள்ளது. இதுவே தேர்தல் பணியில் சுணக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. வெறும் டீயைக் குடித்து விட்டு தொண்டர்கள் இரவு, பகலாக தேர்தல் வேலை பார்த்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. பணம் செலவு செய்யாவிட்டால் தற்போடு கட்சிக் கொடி நடக் கூட யாரும் வரமாட்டார்கள். நாங்கள் தவிப்பதை நன்றாக உணர்ந்தும், தேர்தல் செலவு குறித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கனத்த மவுனத்தில் உள்ளனர்.

இதனால் தேர்தல் பணியை எவ்வாறு மேற்கொள்வது எனத் தெரியவில்லை. அதிமுகவின் பண பலம்அதிமுக வேட்பாளராக தனது மகன் ராஜ் சத்யனை களமிறக்கி உள்ள வி.வி.ராஜன்செல்லப்பா தேர்தல் செலவுக்கு பணத்தைத் தண்ணீராகச் செலவிடுவார். அதிகார பலமும் அவர்களிடம் உள்ளது. மதுரையில் கம்யூனிஸ்ட் போட்டியிடுவதால் பணத்தை செலவு செய்து எளிதில் வென்று விடலாம் என கணக்கு போட்டே, கடுமையாக போராடி தனது மகனுக்கு அவர் சீட் பெற்றுள்ளார். அவரது கணிப்பு உண்மையாகி விடக் கூடாது என்ற ஆதங்கம் திமுகவினரிடம் உள்ளது. எங் களிடம் ஆட்கள் பலம் இருந் தாலும், அதைத் தக்க வைக்க குறைந்தபட்ச செலவுகளையாவது செய்துதான் ஆக வேண்டும். இதில் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்ன செய்யப் போகின்றனர் என்பதைப் பொறுத்தே தேர்தல் பணியில் வேகம் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x