ஸ்டாலின் தேர்தல் ஜுரத்தில் இருக்கிறார்; தோல்வி பயத்தில் என்னென்னவோ பேசுகிறார்: முதல்வர் பழனிசாமி விமர்சனம்

ஸ்டாலின் தேர்தல் ஜுரத்தில் இருக்கிறார்; தோல்வி பயத்தில் என்னென்னவோ பேசுகிறார்: முதல்வர் பழனிசாமி விமர்சனம்
Updated on
1 min read

திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் என்னென்னவோ பேசுகிறார் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

"அதிமுக கூட்டணி மிகப்பெரிய கூட்டணி, வாக்கு வங்கி அதிகம் கொண்ட கூட்டணி. அதனால், அனைத்து வாக்குகளையும் சிதறாமல் பெற வேண்டும். ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் என்னென்னவோ பேசுகிறார். அவர் தேர்தல் ஜூரத்தில் இருக்கிறார்.

தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் நன்றாக நடைபெற்றுள்ளன. அதில் கிடைக்கும் வண்டல் மண்ணையும் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். மழைக்காலங்களில் உபரி நீர் கடலில் கலப்பதைத் தடுக்க தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. நான் ஒரு விவசாயி. ஒரு விவசாயியின் கஷ்டங்களை அறிந்தவன் நான். சொட்டு நீர் பாசனத்தைக் கொண்டு வந்துள்ளோம்.

படிக்காதவர்களே தமிழகத்தில் இல்லை எனும் அளவுக்கு கல்வித் துறையில் புரட்சி நடைபெற்றுள்ளது. உயர்கல்வி படிப்பவர்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் உள்ளனர். அதற்குறிய திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றினார்.

பெண்கள் நலனுக்கு பல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன.ஆனால், திமுக சொன்ன எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அவையெல்லாம் அரசியல் நாடகம்.

தேர்தல் முடிந்த பிறகு ஏழை குடும்ப தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.2,000 சிறப்பு நிதியுதவி வழங்கப்படும்"

இவ்வாறு முதவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in