Last Updated : 24 Mar, 2019 09:52 AM

 

Published : 24 Mar 2019 09:52 AM
Last Updated : 24 Mar 2019 09:52 AM

பொன்.ராதாகிருஷ்ணன் - எச்.வசந்தகுமார் மீண்டும் போட்டி: குமரி தேர்தல் களம் விறுவிறுப்பு

கன்னியாகுமரி தொகுதியில் தேசிய கட்சிகள் சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.வசந்தகுமார் மீண்டும் போட்டியிடுவதால் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அமமுக சார்பில் லெட்சுமணன், மக்கள் நீதி மய்யம் சார்பில் எபினேசர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பொன் ராதாகிருஷ்ணன், எபினேசர் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது எச்.வசந்தகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் வாய்ப்பு கேட்டு டெல்லி மேலிட கதவை தட்டினர். தொடக்கத்திலேயே எச்.வசந்தகுமாருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுக்கும், சிட்டிங் எம்எல்ஏக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்போவதில்லை என்று காங்கிரஸ் தலைமை கெடுபிடி காட்டுவதாக வெளியான தகவலால், வசந்தகுமாருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்குறியும் எழுந்தது.

ஆனால், தற்போது வசந்தகுமாரையே வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவித் துள்ளது. மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் செய்த வளர்ச்சி திட்ட பணிகளை கூறி வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளார். அதிமுக, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியினரின் வாக்கு தனக்கு பெரிதும் கை கொடுக்கும் என அவர் நம்புகிறார். கடந்த தேர்தலில் கிடைத்த அனுபவம் தனக்கு இத்தேர்தலில் கைகொடுக்கும் என வசந்தகுமார் நம்புகிறார். கிறிஸ்தவர்கள் வாக்குகள் மட்டுமின்றி கன்னியா குமரி சட்டப்பேரவை தொகுதியில் அகஸ்தீஸ்வரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள இந்துக்களின் வாக்குகள் பெரும்பகுதியை தனது பக்கம் இழுக்க வசந்தகுமார் திட்டமிட்டுள்ளார்.

அமமுக வேட்பாளர் லெட்சு மணன் மீனவ மக்களின் வாக்கு களை பெரிதும் நம்பியுள்ளார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எபினேசர் மாற்று அரசியலை முன் வைக்கும் கமல்ஹாசனின் முயற்சி தன்னை வெற்றிபெற வைக்கும் என நம்பி களம் காண்கிறார்.

2014-ல் பெற்ற வாக்குகள்

 கடந்த மக்களவை தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக) 3,72,906 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். கடும் போட்டிக்கு மத்தியில் எச்.வசந்தகுமார்(காங்கிரஸ்) 2,44,244 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜாண் தங்கம் 1,76,239 வாக்குகளும், திமுக வேட்பாளர் ராஜரத்தினம் 1,17,933 வாக்குகளும், மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மின் 35,284 வாக்குகளும் பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x