Published : 04 Mar 2019 09:03 PM
Last Updated : 04 Mar 2019 09:03 PM

கூட்டணி இறுதியாகிறது; தேமுதிகவுக்கு 7 தொகுதிகள்?- விஜயகாந்தை சந்தித்தார் ஓபிஎஸ்

தேமுதிக - அதிமுக கூட்டணி இறுதியடைவதை ஒட்டி ஓபிஎஸ் விஜயகாந்தை சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தேமுதிகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கி அதிமுகவுடன்  நாளை உடன்பாடு எட்டப்படலாம் எனத் தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பதில் திமுக, அதிமுக முனைப்பு காட்டி வரும் நிலையில் முதற்கட்ட ரேஸில் அதிமுக முந்தியது. பாமகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்ததன் மூலம் திமுகவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

இதையடுத்து விட்டதைப் பிடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் தேமுதிகவைக் கூட்டணிக்குள் கொண்டுவர திமுக தலைமை முயன்றது. பேச்சுவார்த்தையும் நடந்தது. அதே நேரம் அதிமுக அமைச்சர் தங்கமணி தலைமையில் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் விஜயகாந்த் இறங்கிவந்ததாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய மாட்டேன், 21 தொகுதிகளில் தாங்கள் போட்டியிட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் இடம் ஒதுக்க வேண்டும், பாமகவை விட அதிக தொகுதிகள் வேண்டும் போன்ற கோரிக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி அதிமுகவுக்கு இணக்கமான மனநிலைக்குக் கொண்டு வந்தது.

இந்நிலையில் தேமுதிக, அதிமுக கூட்டணியில் விரைவில் வரும் என அதிமுக அமைச்சர்கள் பேசிவந்த நிலையில் மார்ச் 6-ம் தேதி மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்து அறிவிக்க உள்ளதால் அதற்குள் இறுதிப்படுத்தவேண்டிய நிலையில் அதிமுக தலைமை உள்ளது.

அதிமுக தலைவர்களின் தொடர் பேச்சுவார்த்தையில் விஜயகாந்த் தரப்பில் பாமகவைவிட அதிக தொகுதி அல்லது அதே அளவிலான தொகுதிகள், ராஜ்யசபா தொகுதி ஒன்று, உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவிகிதம் என கோரப்பட்டது.

இதில் பாமகவுக்கு இணையாக 7 தொகுதிகளை அளிக்க அதிமுக தலைமை ஒப்புக்கொண்டதாகவும், உள்ளாட்சி தேர்தல் ஒதுக்கீடு குறித்து பின்னர் பேசலாம் எனக் கூறப்பட்டதாகவும், ராஜ்ய சபா சீட்டுக்குப் பதில் மத்திய அரசின் வாரியத்தலைவர் பதவிகள் 2 வழங்குவதாகவும் பாஜக தலைமையிடமும் பேசி தேமுதிகவை இணங்க வைத்துள்ளதாகவும் அதிமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இதை தேமுதிக தரப்பும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் உடனிருந்தார். கூட்டணிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்ததை அடுத்து அதை உறுதிப்படுத்தவே ஓபிஎஸ் சென்றுள்ளார் என அதிமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்தும் கைகோப்பார் எனவும் தேமுதிகவுக்கும் 7 தொகுதி ஒதுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமைப்பது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விஜயகாந்துடன் பேசியதாக தேமுதிக தலைமைக் கழகமும் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x