Published : 15 Mar 2019 02:19 PM
Last Updated : 15 Mar 2019 02:19 PM

தேர்தல் சின்னம் என்று கையை உடம்பிலிருந்து அகற்றி விடுவீர்களா? - தாமரை கோலத்தை அழித்ததற்கு தமிழிசை கண்டனம்

தாமரை வடிவிலான கோலங்களை தேர்தல் அதிகாரிகள் அழித்ததற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பொதுமக்களால் வரையப்பட்ட கோலங்களில், தாமரை வடிவத்திலான கோலங்கள் இருந்தன. நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், தாமரை வடிவிலான கோலங்களை தேர்தல் அதிகாரிகள் அழித்தனர். இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழிசை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பொதுமக்களால் வழக்கப்படி ஆண்டாண்டு காலமாக வரையப்படும் தாமரை கோலத்தை அழித்த அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

மஹாலஷ்மி அமர்ந்திருக்கும் தாமைரையை பக்தி நோக்கத்தோடு பொதுமக்கள் வரைந்திருக்கின்றனர். தேர்தல் நோக்கத்தோடு வரையப்பட்டது அல்ல. அப்படியென்றால் கை காண்பித்தால் தேர்தல் சின்னம் என்று கையை உடம்பிலிருந்து அகற்றி விடுவீர்களா? தினமும் சூரியன் உதிக்கின்றது தேர்தல் சின்னம் என்று சூரியனை மறைத்து விடுவீர்களா?

இந்துமத பழக்கங்களையும், உணர்வுகளையும் அதிகாரத்தின் பெயரால் அழிக்க முற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்" என தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x