Published : 15 Mar 2019 01:47 PM
Last Updated : 15 Mar 2019 01:47 PM

திமுக - காங்கிரஸ் கூட்டணி அடிக்கடி நிறமாறும் பச்சோந்தி கூட்டணி: தமிழிசை விமர்சனம்

திமுக - காங்கிரஸ் கூட்டணி அடிக்கடி நிறமாறும் பச்சோந்தி கூட்டணி என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் மேடையில் தமிழக கம்யூனிஸ்டுகளை கட்டியணைத்துவிட்டு அடுத்த நாள் கேரளா சென்றவுடன் அங்குள்ள கம்யூனிஸ்டுகளை கொலைகார கம்யூனிஸ்டுகள் என்று கண்டித்து உரையாற்றுகிறார்.

திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மதச்சார்பின்மை கட்சியை ஆதரிப்போம் என்று கூறும் ஸ்டாலின், கட்சி பெயரே மதம் சார்ந்த பெயர் கொண்ட கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதுதான் உங்கள் மதச்சார்பின்மையா?

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேற்று இலங்கை தமிழின படுகொலைக்கு துணை நின்ற ராகுல்காந்தியை கட்டியணைத்து வரவேற்று அடுத்த நாள் சென்னையில் இலங்கை தமிழின படுகொலையை கண்டித்து இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.

மதிமுக கட்சி தலைவர் வைகோ, கோடம்பாக்கத்தில் சினிமா பாணியில் ராணுவ உடை இரவல் வாங்கி அணிந்துகொண்டு கள்ளத்தோனியில் சென்று வந்து கண்ணீர்விட்டு கொலைப்பழி சுமத்தியதாக தொண்டர்களை தூண்டிவிட்டு அவர்களை தீக்கிரையாக்கி விட்டு ஸ்டாலினை முதல்வராக்குவோம் என முழங்குகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், மாநிலங்களவை சீட்டுக்காக திமுக - அதிமுக என மாறி மாறி கூட்டணி சேரும் பச்சோந்திகள்.

சென்னையில் பட்டாசுக்கு எதிராக போரட்டம் நடத்திவிட்டு சிவகாசிக்கு சென்று பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவது,
நகரங்களில் சர்க்கரை விலையை குறைக்கசொல்வதும், கிராமங்களுக்கு சென்று கரும்புக்கான கொள்முதல் விலை ஏற்ற சொல்வதும் கம்யூனிஸ்டுகளின் நிறமாறும் அரசியல்" என தமிழிசை விமர்சித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x