Published : 02 Mar 2019 11:08 AM
Last Updated : 02 Mar 2019 11:08 AM

சிவகங்கையில் அதிமுக-பாஜக கூட்டணியில் யாருக்கு வாய்ப்பு? - பி.ஆர்.செந்தில்நாதன், எச்.ராஜாவுக்கு இடையே கடும் போட்டி

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் இதுவரை திமுகவும், அதிமுகவும் தலா 2 முறை வெற்றிபெற்றுள்ளன. திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு பலமுறை விட்டுக் கொடுத்ததால் இதுவரை காங்கிரஸ் கட்சி 9 முறை வென்றுள்ளது.

2014 மக்களவைத் தேர்தலில் அதிமுகவும், திமுகவும் இங்கு நேரடியாக எதிர்த்து போட்டியிட்டன. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்நாதன் வெற்றி பெற்றார். தற்போது 2019 மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக போட்டியிட்டால் வெற்றிபெறும் என உளவுத்துறையினர் அறிக்கை அனுப்பியுள்ளதாகக் கூறப் படுகிறது. எனவே, அக்கட்சி, கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு இத்தொகுதியை விட்டுக் கொடுப்பது சந்தேகமே என கூறப்படுகிறது.

ஆனால், காரைக்குடியில் வசிக்கும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, புது டெல்லி தலைமையிடம் பேசி எப்படியாவது இத்தொகுதியை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜகவுக்கு கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்க்கக்கூட ஆளில்லாத நிலையில், கூட்டணிக் கட்சியின் பலத்தை நம்பி மட்டுமே இங்கு அவரால் களமிறங்க முடியும்.

எனவே, பலம் வாய்ந்த எதிர்முகாமான திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு கடும் போட்டி தருவதற்கு தொண்டர்கள் பலமிக்க அதிமுகவால்தான் முடியும் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு பி.ஆர்.செந்தில்நாதன் மனு செய்துள்ளார். அதோடு, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனும் மனு அளித்துள்ளார். தொகுதியை தட்டிச் செல்லப்போவது அதிமுகவா, பாஜகவா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

இதுகுறித்து மாவட்ட செயலாளரும், தற்போதைய எம்பியுமான பி.ஆர்.செந்தில்நாதன் கூறியதாவது: அதிமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்போம். தற்போது வரை அதிமுக சார்பில் போட்டியிட தலைமையிடம் 60 பேர் விருப்ப மனு அளித்துள்ளோம். அதிமுக போட்டியிட்டாலும் சரி, கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டாலும் சரி. யார் போட்டியிட்டாலும் அதை ஏற்று வெற்றிக்காக கடுமையாக உழைப்போம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x