Last Updated : 03 Mar, 2019 09:25 AM

 

Published : 03 Mar 2019 09:25 AM
Last Updated : 03 Mar 2019 09:25 AM

காங்கிரஸ் - மஜத இடையே 9-ம் தேதிக்குள் தொகுதி பங்கீடு- விரைவில் தேவகவுடாவை சந்திக்கிறார் ராகுல் காந்தி

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத இடையே தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விரைவில் மஜத தேசியத் தலைவர் தேவகவுடாவை சந்தித்து ஆலோசனை நடத்த முடிவெடுத்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடைபெறுவதால், மக்களவைத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என கடந்த ஜூலையில் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜனவரியில் மஜத மாநிலத் தலைவர் எச்.விஸ்வநாத், பொதுப்பணித் துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணா, காங்கிரஸ் மாநிலத்தலைவர் தினேஷ் குண்டுராவ், துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வர் ஆகியோரை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மஜத தரப்பில், மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 12 தொகுதிகளை கோரினர். ஆனால் காங்கிரஸ் 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்தது. இதனை மஜத ஏற்காததால் 3 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. தொகுதி நிலவரம் தெரியாததால் இரு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க முடியாத நிலையில் இருக்கின்றன.

அதே வேளையில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10-ம் தேதி கர்நாடகாவில் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், தற்போது வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனால் காங்கிரஸ் மேலிடம் மஜத உடனான தொகுதி பங்கீட்டை விரைவில் இறுதி செய்ய முடிவெடுத்துள்ளது. வரும் 9-ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவில் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதால், அதற்கு முன்பாக கூட்டணியை முடிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

6 முதல் 8 தொகுதிகள்

மஜத 12 தொகுதிகளை கோரிவரும் நிலையில் காங்கிரஸ் தரப்பில் 6 முதல் 8 தொகுதிகள் மட்டுமே அக்கட்சிக்குஒதுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2009 மற்றும் 2014 தேர்தல்களில் வெற்றி பெற்ற தொகுதிகளை மஜதவுக்கு விட்டுத்தர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மஜதவுக்கு வெற்றி வாய்ப்புள்ள ஹாசன், மண்டியா, ஷிமோகா, பெங்களூரு வடக்கு, மைசூரு, துமக்கூரு ஆகிய 6 தொகுதிகளை விட்டுத்தர முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மஜத தேசிய பொதுச்செயலாளர் டேனிஷ் அலி கூறுகையில், “மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் விரைவில் கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத இடையே தொகுதி பங்கீடு ஏற்படும். மார்ச் 2-ம் வாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எங்கள் தலைவர் தேவகவுடாவை சந்தித்து பேசி, கூட்டணியை இறுதி செய்வார். எங்கள் கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லாததால், கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி எவ்வித பிரச்சினையும் இல்லாமல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x